ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்
கும்பலைச் சேர்ந்த கஞ்சிபான இம்ரான் பிரான்ஸில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளதாக இலங்கையின் தேசியப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நாட்டின் பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவர் வெளிநாட்டில் அரசியல் பாதுகாப்பைப் பெறுவது இதுவே முதல் தடவை என சம்பந்தப்பட்ட பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பான பட்டியலில் இம்ரானின் பெயர் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
காஞ்சிபான இம்ரானைக் கைது செய்வதற்காக பாதாள உலகத் தடுப்புப் பிரிவு பொலிஸ் குழுவொன்று தேடும்போது, அவர் துபாய் நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் அங்கிருந்து தனது பாதாள உலக செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், பெப்ரவரி 2019 இல், மாகந்துர மதூஷின் பிள்ளையின் பிறந்தநாள் விழாவின் போது 31 பாதாள உலக செயற்பாட்டாளர்களை துபாய் பொலிஸார் கைது செய்தனர்.
அவர்களில் கஞ்சிபான இம்ரானும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன் பின்னர், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட அவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தமது காவலில் எடுத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
பின்னர் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட காஞ்சிபான 2022ஆம் ஆண்டு மன்னார் சென்று மீன்பிடி படகில் இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்.
இதற்கு இந்திய உளவுத்துறையின் ஆதரவு கிடைத்ததாக அந்நாட்களில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அதன் பின்னர் அவர் பிரான்ஸுக்கு தப்பிச் சென்று அங்கு அரசியல் தஞ்சம் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது