மலையகத்திற்கான இந்திய அரசினால் வழங்கப்படுகின்ற வேலைத்திட்டங்களை விரைவாக நிறைவு செய்வதனை இந்தியா விரும்புவதாக
இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் நேற்றைய தினம் (02) சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் நடைபெற்ற இச்சந்திப்பில் இ.தொ.காவின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், அக்கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளரும் நிதிச் செயலாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதி தவிசாளர் பெருமாள் ராஜதுரை, இ.தொ.காவின் உள்ளூராட்சிமன்றத் தலைவர்கள் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள், இச்சந்திப்பில் கலந்துகொண்டார்கள்.
குறிப்பாக இச்சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டது.
அதாவது மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பிலும், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்படுகின்ற வீடுகளுக்கான காணி உறுதி பெற்றுக்கொடுப்பது தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
அதாவது மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பிலும், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்படுகின்ற வீட்டுத்திட்டத்தினை விரைவுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க, மிக விரைவில் வீட்டுத்திட்டங்களை நிறைவு செய்ய முயற்சிப்பதோடு, மேலதிக அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதாக இந்திய உயர்ஸ்தானிகரால் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்திய அரசாங்கத்தின் உதவின் கீழ் மலையக பெருந்தோட்ட பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கல்வி மேம்பாட்டுத் திட்டத்தினை (வித்தியாவர்தன) வழங்கி எமது ஆசிரியர்களுக்கான அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) ஆகிய துறைகளில் புலமையை அதிகரித்துக் கொள்வதற்காக உதவி வழங்கியைமைக்காக இந்திய அரசாங்கத்திற்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டதோடு, அத்திட்டத்தினை மேலும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லுமாறும் இ.தொ.காவினால் கோரிக்கை வைக்கப்பட்டது.
டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கான புதிய கட்டிடம் ஒன்றை இந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிப்பதற்கான திட்டம் ஒன்று இருப்பதாகவும், வைத்தியர்களுக்கான விடுதி ஒன்றினை நிர்மாணிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் இந்திய உயர்ஸ்தானிர் தெரிவித்தார்.
அதேபோல் இந்திய அரசின் புலைமைத் திட்டத்தினூடாக மிகவும் குறைந்தளவிலான மலையக மாணவர்களே உள்வாங்கப்படுவதனால், எதிர்காலத்தில் மலையக மாணவர்களுக்கு என்று இந்திய துணைத் தூதரகத்தினூடாக இந்திய அரசின் புலைமைத்திட்டம் வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதற்ககிணங்க, இது தொடர்பாக விரைவில் மலையகத்திற்கு என்று புதியதொரு புலைமைத் திட்டம் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்த அதேவேளை, இதனூடாக அதிகப்படியான மலையக மாணவர்கள் உள்வாங்கப்படுவார்கள் என்ற கருத்து பரிமாறப்பட்டது.
மேலும், மலையகத்திற்கான இந்திய அரசினால் வழங்கப்படுகின்ற வேலைத்திட்டங்களை விரைவாக நிறைவு செய்வதனை இந்தியா விரும்புவதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
புதிதாக தெரிவுசெய்பட்டுள்ள உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்காக இந்தியாவின் அஹமதாபத்தில் நடைபெறவுள்ள பயிற்சிப் பட்டறையில் இ.தொ.கா சார்பில் 20 உறுப்பினர்களுக்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க அதற்கான பதிலையும் விரைவில் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.