யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் , புதிதாக 05 மனித என்புக் கூட்டு தொகுதிகள்
அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித என்புக்கூட்டு தொகுதிகளில் 06 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் கடந்த 15 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில், 61 என்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி பகுதியில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மற்றும் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.
இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 30 ஆவது நாளாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 15 நாட்களாக முன்னெடுக்கப்படும் நிலையில் இன்றைய தினம் வரையில் 61 என்புக் கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 39 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 06 என்பு கூட்டு தொகுதியுடனுமாக 126 என்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 135 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை இன்றைய தினம் தற்போதுள்ள 2 மனித புதைகுழிகளை விட அயலில் மேலும் மனித புதைகுழிகள் உள்ளனவா என்பதனை ஆராயும் நோக்கில், ஸ்கான் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. குறித்த ஸ்கான் நடவடிக்கை நாளைய தினம் (5) நடைபெறவுள்ளதுடன் , ஸ்கான் நடவடிக்கை குறித்தான அறிக்கை யாழ் . நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் மேலதிக நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
அத்துடன் நாளைய தினம் (5) மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை அடையாளம் காணும் வகையில் அவற்றை மக்களுக்கு காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இன்று (04) செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிட்டனர்.
மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களான கலாநிதி ஜகன் குணத்திலாக, பேராசிரியர் தை. தனராஜ் மற்றும் பேராசியர் பாத்திமா பர்ஷான ஹனீபா ஆகியோருடன் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த, கனகராஜ் உள்ளிட்ட குழுவினரே நேரில் பார்வையிட்டனர்.
அதன்போது புதைகுழி அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அங்கிருந்த துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.