முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் சர்வதேசமயப்படுத்தப்பட வேண்டுமென, ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
காத்தான்குடியில் நேற்று (03) அனுஷ்டிக்கப்பட்ட 35ஆவது தேசிய ஷுஹதாக்கள் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
1990ம் ஆண்டு ஆகஸ்ட் 03ம் திகதி ஹுஸைனியா பள்ளிவாயலிலும், மீரா ஜும்ஆ பள்ளிவாயலிலும் நடந்த படுகொலைச் சம்பவங்களில் ஷஹீதாக்கப்பட்ட 103 ஷுஹதாக்கள் நினைவாக நேற்று துஆப்பிரார்த்தனை நடத்தப்பட்டது.
காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலாமா சபை மற்றும் ஊர் ஜமாஅதார்களினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு தொடர்ந்துரையாற்றிய ஹக்கீம் எம்.பி, “துயர நினைவுகளை மீட்டிக்கொள்வதற்கும் ஷுஹதாக்களுக்காக பிரார்த்தனை செய்வதற்குமான ஒரு சந்தர்ப்பமாக இது வாய்த்ததையிட்டு பெருமகிழ்வுறுகிறோம்.
“இவ்வாறான சம்பவங்களின் படிப்பினைகளை சரிவர உணர்ந்து இனங்களுக்கிடையிலான உறவை மீளக்கட்டியெழுப்புவதில் எமது கட்சியும், கட்சித் தொண்டர்களும் முழு மூச்சுடன் ஈடுபட வேண்டும்.
“அத்திடசங்கர்ப்பத்தை நாம் இந்த ஷுஹதாக்கள் நினைவு நாளில் உறுதி பூணுவது மாத்திரமல்லாமல், இத்துன்பியல் சம்பவங்கள் குறித்த வரலாற்றையும் சரிவர தொடர்ந்தும் மனதிலிருத்தி, முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் சர்வதேசமயப்படுத்தப்பட வேண்டியது முக்கியமானதாகும்” எனத் தெரிவித்தார்.
- எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA)
ஓட்டமாவடி