காணி இல்லாத 15ஆயிரம் பேருக்கு காணி வழங்க முன்வராத அரசாங்கம், சீனாக்கு 700 ஏக்கர் காணி வழங்க முன்வருவது ஏன் என பொது அமைப்புக்கள் கேள்வி எழுப்புகின்றன என கரைச்சி பிரதேச கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் சமாச தலைவர் கருப்பையா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ‘‘அரசாங்கம் சீனாவிடமிருந்து வாங்கிய கடனை மீள செலுத்த முடியாமல் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரணைமடு குளத்தின் தெற்கு புறமாக உள்ள பகுதியில் 500 ஏக்கர் வனப்பகுதியை சீனாவிற்கு விற்பதாகவும், இயக்கச்சியை அண்டிய பகுதியில் 200 ஏக்கர் காணிகளையும் சீனாவிற்கு விற்பதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சி செய்துள்ளது.

வட பகுதி மக்களிற்கு பாதிப்பு

இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள இந்த முயற்சியானது வட பகுதி மக்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.

வடக்கு மாகாணத்தின் இதய பகுதியாக இருக்கின்ற இரணைமடு குளத்தின் தெற்காக உள்ள 500 ஏக்கர் காணிகளை சீனாவிற்கு கொடுத்தால் சீனர்கள் அங்கு குடியிருக்கப்போகின்றார்கள். அல்லது அவர்களது ஆய்வகங்கள் அல்லது அவர்களது செயற்பாடுகள் மிக்க கேந்திர நிலையங்களை அங்கு நிறுவப்போகின்றார்கள்.


இது இலங்கைக்கு மாத்திரமல்ல குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மக்களிற்கு பாதிப்பை தரக்கூடியதாக அமையும் என்பது தொடர்பில் மக்கள் சார்ந்த பொது அமைப்புக்கள் என்ற வகையில் அச்சப்படுகின்றோம்.

இலங்கை பெற்றுக்கொண்ட கடனுக்காக வட பகுதியில் இருக்கின்ற முக்கியமான பகுதிகளை சீனாவிற்கு கொடுக்க வேண்டும் என்ற தேவை இலங்கை அரசாங்கத்திற்கு இருக்கக்கூடாது. ஏனெனில் அது எங்கள் வாழ்வாதாரங்களையும், அடுத்துவரும் சந்ததிகளையும் பாதிக்கும் வகையில் இது அமைந்திருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கௌதாரிமுனை பகுதியில் கடலட்டை பண்ணை அமைப்பதற்காக கடல் பகுதியை விற்பதற்கான முயற்சியும் நடந்தது. மக்கள் பிரதிநிதிகள் மற்றம் பொது அமைப்புக்களின் கடுமையான எதிர்ப்புக்களின் பின்னர் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக அறியக்கூடியதாக இருக்கின்றது. அந்த விடயம் கடந்து போய் இருக்கின்ற ஓரிரு ஆண்டுகளிற்குள் இந்த விடயம் சூடுபிடித்திருக்கின்றது.

குறித்த இரு விடயங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் இங்குள்ள மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற விடயமும் இதில் அடங்கியிருக்கின்றது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இப்போழுது விவசாயம் உள்ளிட்ட பல்துறைகளிலிருந்து மீண்டு வருகின்ற இந்த மக்கள் பிரதேசத்தை சீனாவுக்கு தாரைவார்ப்பது என்பது தமிழ் மக்களையும் தமிழ் மக்களையும், இலங்கை மக்களையும் படுகுழியில் தள்ளும் விடயமாகதான் இது அமையும்.

வாங்கிய கடனுக்காக சீனாவுக்கு இடங்களை கொடுப்பது என்றால், இந்தியா, பாகிஸ்தான், ஐரோப்பிய நாடுகளில் வாங்கிய கடன்களிற்காக இன்னும் பல இடங்களை கொடுக்கவேண்டிய சூழல் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படும்.

அவ்வாறான சூழல் ஏற்பட்டால், மக்கள் குடியிருப்புக்களையும் விற்பதற்கு தயாராக வருவார்கள். மக்கள் வாழ்வதற்கு அச்சம் ஏற்படுகின்ற சூழலை உருவாக்குவதற்காகதான் இரணைமடுவிற்கு தெற்காக இருக்கின்ற 500 ஏக்கர் காட்டினை சீனாவிற்கு கொடுக்கின்ற விடயம் அமைந்திருக்கின்றது. பொருளாதாரத்திலிருந்து மக்களை மீட்டெடுக்கின்ற சூழல் இலங்கை அரசுக்கு இருக்கின்றது.

மீட்டெடுப்பதாக கூறிக்கொண்டிருக்கின்ற சம நேரத்திலே, குரங்குகளையும் சீனாவிற்கு விற்கின்றார்கள். சம நேரத்தில் குரங்குகள் வாழக்கூடிய வனப்பகுதிகளையும் சீனாவிற்கு விற்கின்றார்கள்.

இந்த நாட்டில் வாழக்கூடிய அச்சமான சூழல் இன்று எமக்கு இருக்கின்றது. 1 லட்சம் குரங்குகளை சீனாவிற்கு ஏற்றுகின்றார்கள். வனப்பகுதிகளை சீனாவிற்கு கொடுக்கின்றார்கள். அடுத்து மக்களைத்தான் கொடுப்பார்களா என்ற அச்சம் எமக்க இருக்கின்றது.

இலங்கை அரசாங்கம் வடக்கு மாகாணத்தின் இதய பூமியாக விளங்குகின்ற இரணைமடுவிற்கு தெற்காக இருக்கின்ற 500 ஏக்கர் வனத்தினை சீனாவிற்கு கொடுக்கின்ற விடயத்தினை மக்களும் சூழலும் பாதிக்கப்படாத வகையிலே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் சார்பில் வேண்டுகின்றேன்.

கிளிநொச்சி மாவட்டத்தைப்பொறுத்தவரையில், 3000க்கு மேற்பட்ட மக்கள் காணிகள் இல்லாமல் உறவினர்கள் வீடுகளில் வாழுகின்றார்கள். அதே போன்றுதான் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டத்திரும் மக்கள் இருக்கின்றார்கள்.

குறிப்பாக வடக்கு மாகாணத்தில் 15ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் காணி இல்லாமல் வாழ்கின்ற சூழல் இருக்கின்றது. வடக்கு மாகாணத்தில் போரால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கின்ற மக்களிற்கு காணிகளை கொடுப்பதற்கு முன்வராத அரசாங்கம், சீனாவிற்கு கொடுக்க நினைப்பதானது எமக்கு பலத்த சந்தேகங்களை எழுப்புகின்றது.

நூற்றாண்டு காலமாக மலையகத்தில் இருக்கின்ற மக்கள் லயன் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களும் இந்த நாட்டினுடைய குடிமக்களாக வாழ்கின்றார்கள். இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு மிக முக்கிய பங்களிப்பை செய்கின்றவர்கள் பிரித்தானியர்களால் வழங்கப்பட்ட லயன் வீடுகளில் வாழ்கின்றார்கள்.

ஆகவே, இந்த நாட்டினுடைய மக்களிற்கான உரிமைகள் கொடுக்கப்பட வேண்டுமாக இருந்தால், அந்த பகுதியில் இருக்கின்ற மக்களையும் சீனாவிற்கு தாரைவார்க்கும் பகுதிகளிலே அவர்களை குடியேற்ற முடியும்.

அது இந்த நாட்டிலே ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கான ஆரம்ப புள்ளியாகக்கூட அமையும். அதேமாதிரியாக, இலங்கையில் புதிதாக கொண்டுவரப்படவிருக்கின்ற பயங்கரவாத சட்டம் என்பது, மிக ஆபத்தானதாக அமைந்திருக்கின்றது. மக்கள் போராட்டங்களை நடத்த முடியாது என்பதும் அதில் குறிப்பிடப்படுகின்றது.

அவ்வாறு நடத்தினால் அச்சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு சீனாவிற்கும், ஏனைய நாடுகளிற்கும் இலங்கையை பிரித்து பிரித்து கொடுக்கின்றபொழுது, மக்கள் தமது உரிமைக்காக போராட முன்வருகின்றபொழுது, இந்த புதிய பயங்கரவாத சட்டத்தை பாவித்து மக்களை அடக்கும் முயற்சியாக அமையும் என்ற சந்தேகம் எழுகின்றது.

இந்த விடயங்கள் மக்களிற்கு சார்பாகவும், நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் இந்த விடயங்களில் அக்கறை செலுத்த வேண்டும்‘‘ என தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி