மாத்தறை - வெலிகம பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் தாக்குதலுக்கு இலக்காவது
போன்ற காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக வெளியாகி வருகின்றது.
பிலிப்பைன்ஸைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த போது கடற்கரைப் பகுதியில் வைத்து இலங்கையர் ஒருவரால் கடுமையாக தாக்கப்படுவது போன்று இந்த காணொளி காணப்படுகின்றது.
குறித்த சுற்றுலாப் பயணி தனது யூடியூப் தளத்தில் இந்த காணொளியை பகிர்ந்துள்ள நிலையில், அதற்கு கீழான பின்னூட்டங்களில் இலங்கை சுற்றுலாத் துறையை கேள்விக்குள்ளாக்கும் வகையிலான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
எவ்வாறாயினும், குறித்த காணொளியின் உண்மைத் தன்மையை ஆராயும் போது இந்த காணொளி கடந்த 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட ஒன்று என்றும், குறித்த தாக்குதல் நடவடிக்கைக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு, தாக்குதலில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டிருந்தார். அத்துடன், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, குறித்த சுற்றுலாப் பயணி மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவுள்ளது.
பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் சுற்றுலாப் பயணி, பெலேனா கடற்கரையில் உள்ள ஒரு சர்ஃபிங் பயிற்சி நிலையத்தின் ஊழியர் ஒருவர் படப்பிடிப்பு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தன்னைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தியிருந்தார்.
எவ்வாறாயினும், தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் கடந்த வருடம் இடம்பெற்றது என்றும், அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் பழைய காணொளியை மீண்டும் சமூக ஊடகங்களில் பகிர்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், சமூக ஊடகங்கள் மூலம் வெளிக் கொண்டு வரப்படும் முறைப்பாடுகள் உட்பட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிக்கு எதிரான சம்பவங்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
எனினும், சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் பழைய சம்பவங்களை அண்மைய சம்பவம் போல தொடர்ந்து பரப்பி, பொதுமக்களை தவறாக வழி நடத்துவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தவறான கருத்துக்களை பரப்பி அல்லது இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
மேலும், கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான இலங்கையின் பொருளாதாரத்தின் மீள் எழுச்சிக்கு சுற்றுலாத் துறை மிக முக்கிய பங்கை வகிக்கும் நிலையில், இது போன்ற சிலரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் சுற்றுலாத்துறையின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கக் கூடியதாக அமைந்துள்ளது.
அத்துடன், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடத்தில் நியாயமாகவும், கண்ணியமான முறையில் நடந்து கொள்ள வேண்டியது இலங்கையர்கள் ஒவ்வொருவரது பொறுப்பு என்பதோடு அது எமது நாட்டின் மீதான நன்மதிப்பை மேலும் உயர்த்தவும் வழிவகுக்கும்.