யாழ்ப்பாணம் - செம்மணியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, “புதைக்கப்பட்ட எம்மவர் உயிருக்கு நீதி வேண்டும்” என்ற
கோசத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கு பகிரங்கமாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு மற்றும் பல சமூக அமைப்புகள், உரிமைப் பாதுகாப்பாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பெண்கள் குழுக்கள், மீனவர் சங்கங்கள், விவசாய அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்களால் இன்று வெள்ளிக்கிழமை (20) முன்வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
1983ஆம் ஆண்டு தொடங்கி 2009ஆம் ஆண்டு வரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் மீது நடைபெற்ற படுகொலைகள், சட்டவிரோதமான கூட்டுக் கொலைகள், காணாமலாக்கங்கள் ஆகியவை இலங்கை அரசால், இந்திய இராணுவத்தால் மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கிய தமிழ் ஆயுதக்குழுக்களால் மேற்கொள்ளப்பட்டதாக வலியுறுத்தினர்.
குறிப்பாக பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் வெட்டப்பட்டும், எரிக்கப்பட்டும், சுட்டும் படுகொலை செய்யப்பட்டனர். இதனுடன், வடமாநிலத்தில் தற்போதுவரை மூன்று முக்கியமான மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன:
மன்னார் மனித புதைகுழி (2018) - பழைய சதோச வளாகத்தில் 323 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. இதில் 28 சிறுவர்களின் எலும்புக்கூடுகளும், மெலிபன் பிஸ்கட் பை உள்ளிட்ட உணவுப் பொருள் சான்றுகளும் கிடைத்தன.
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் (2023) - 52 எலும்புக்கூடுகள், விடுதலைப் புலிகள் போராளிகளின் சீருடைகள், உள்ளாடைகள், அங்கத்துவ இலக்க தகடுகள் ஆகியவை கிடைத்தன. பெரும்பாலானவை பெண்களுக்குரிய உடைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் – செம்மணி (2025) – 13ம் திகதி மாசி மாதம் முதன்முறையாக கட்டுமான பணிகளின் போது மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுவரை 19 எலும்புக்கூடுகள் அகழப்பட்டுள்ளன. இதில் 3 சிசுக்களுக்குரிய எலும்புக்கூடுகள் உள்ளன.
இவை தவிர, பல்வேறு நேரங்களில் முன்னாள் இராணுவ அதிகாரிகள், விசாரணைகளில் குறிப்பிட்ட இடங்களில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் எனக் கூறியுள்ளார்கள். முன்னாள் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, 1998 இல் செம்மணியில் 300க்கும் மேற்பட்டோர் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், மண்டைதீவு, திராய்க்கேணி, சத்துருக்கொண்டான், மற்றும் வந்தாறுமூலை பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டனர்.
இந்த வரலாற்றுப் பின்னணியில், அரசாங்கம் தங்களது பக்கச்சார்பற்ற நிலைப்பாட்டை காட்டி, உண்மையை வெளிக்கொணர சுயாதீன விசாரணை முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நீண்டகாலமாக நீதிக்காக காத்திருப்பதாகவும், எம்மவர் உயிர்களுக்கு நீதி கிடைக்காமல் போவதை ஏற்க முடியாது எனவும் கூறப்பட்டது.
மேலும், இக்கோரிக்கை அரசாங்கம் மீது நீதியை நிலைநாட்டும் பொறுப்பை ஏற்க வேண்டிய அழுத்தத்தை உருவாக்கும் நோக்குடன் முன்வைக்கப்பட்டது.