வடக்கில் இராணுவ ஆதரவுடன் விகாரை அமைக்கப்பட்ட தமிழர்கள் உரிமை கோரும் காணிக்கு மாற்று காணி அல்லது இழப்பீடு
வழங்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
‘தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்காக’ அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம் (ONUR), சர்ச்சைக்குரிய விகாரை குறித்த அறிக்கையை நீதி அமைச்சரிடம் ஒப்படைத்ததை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
“அமைச்சரின் தலைமையில் அமைச்சு பரிந்துரைகள் தொடர்பில் அவசர நடவடிக்கை எடுத்து வருகிறது,” என தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலத்தின் தலைவர் பேராசிரியர் விஜித் ரோஹன பெர்னாண்டோ ஜூன் 5 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
காணி உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர்கள், அரசாங்கத்தின் மாற்று காணி அல்லது இழப்பீட்டுத் திட்டத்தை முற்றிலுமாக நிராகரித்து, தங்கள் பரம்பரை காணியை தங்களிடம் மீள ஒப்படைக்க வேண்டுமென கோருகின்றனர்.
ஜூன் 12 ஆம் திகதி, வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்க உறுப்பினரான கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, தையிட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரையின் காணி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையைத் தீர்க்க, பௌத்த விகாரையை காணியில் இருந்து அகற்றுவதற்கான சாத்தியக்கூறு இல்லை எனத் தெரிவித்திருந்தார்.
விகாரைக்குரிய காணி ஒதுக்கப்படும் எனவும் தமிழ் மக்களின் காணியில் விகாரை கட்டப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டால், மாற்று காணி அல்லது இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார்.
“தையிட்டி பிரச்சினை இந்த பிரதேசத்தில் பெரிய ஒரு பிரச்சினை. தையிட்டி பிரச்சினைக்கு இந்த மாதத்திற்குள் தீர்வினை வழங்க தீர்மானித்துள்ளோம். ஏனென்றால் நமக்குத் தெரியும் தையிட்டி விகாரையை உடைக்க ஏழுமா? ஏழாது. அப்படியாயின் ஒன்று, விகாரைக்குரிய காணியை ஒதுக்கிவிட்டு, மிச்ச காணிகளை விடுவிப்பது. ஜிஏவிடம் ஒப்படையுங்கள், ஜிஏ, டிஎஸ்ஸிடம் ஒப்படைப்பார். பின்னர் போய் பாருங்கள் காணி இருக்கிறதா என்று, காணி இருக்கின்றவர்களுக்கு அதனை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். மக்களின் காணிக்குள் விகாரை அமைந்திருந்தால் அதற்கு மாற்றுக் காணிகள் அல்லது நட்டஈடு வழங்க முடியும்.”
2023 முதல் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் விகாரைக்கு அருகில் போராட்டம் நடத்தி வரும் தமிழர்கள், 16 தமிழ் குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 150 பரப்பு காணியை இராணுவம் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தி திஸ்ஸா விகாரையை அமைத்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.
விகாரை அமைக்கப்பட்ட காணி உரிமையை கோரும் 16 பேரில் (குடும்பங்களில்) ஒருவரான வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பத்மநாதன் சாருஜன், அரசாங்கத்தின் தீர்மானத்தை கடுமையாக நிராகரிக்கிறார்.
களனி பல்கலைக்கழகத்தின் கிறிஸ்தவ விவகாரத் துறையின் பேராசிரியர் விஜித் ரோஹன் பெர்னாண்டோ தலைமையிலான தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம், சர்ச்சைக்குரிய திஸ்ஸ விகாரை தொடர்பான விசாரணை அறிக்கை ஏற்கனவே நீதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
திஸ்ஸ விகாரை காணிப் பிரச்சினை தொடர்பான அனைத்து தரப்பினரையும் யாழ்ப்பாண நாகவிகாரை சர்வதேச பௌத்த மையத்திற்கு வரவழைத்து ஏப்ரல் முதல் வாரத்தில் ஒரு மத்தியஸ்த நிகழ்ச்சியை நடத்தியதாக 2025 ஜூன் முதல் வாரத்தில் அலுவலகம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்திருந்தது.
தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம், இந்த செயல்முறையை எளிதாக்கி, நிறுவனத்தால் வழங்கப்பட்ட பரிந்துரைகள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கையைத் தயாரித்து, மேலதிக நடவடிக்கைக்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரிடம் இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும் அதில் கூறப்பட்டிருந்தது.
தமிழ் மக்களின் பாரம்பரிய காணி உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியமைக்கு அமைய, திஸ்ஸ விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட காணிகள் குறித்து கடற்றொழில் அமைச்சர் மற்றும் நீதி அமைச்சரின் கருத்துக்கள் முரண்படுகின்றன.
காணி உரிமையை உறுதிப்படுத்தும் மக்களுக்கு காணி வழங்கப்படும் என, ஏப்ரல் முதல் வாரத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது நீதி அமைச்சர் உறுதியளித்த விடயத்தை, வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பத்மநாதன் சாருஜன் சுட்டிக்காட்டுகின்றார்.
திஸ்ஸ விகாரைக்கு காணி கையகப்படுத்தப்பட்டமை காரணமாக காணியை இழந்த அனைத்து குடும்பங்களும் கலந்துரையாடலின் போது காணி மீதான தங்கள் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் சமர்ப்பித்ததாக பத்மநாதன் சாருஜன் மேலும் கூறுகிறார்.
"அமைச்சர் கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது. காணி மக்களுக்குச் சொந்தமானது என்பதை நாங்கள் உறுதிப்படுத்தினால், அது மக்களுக்கு வழங்கப்படும் என நீதி அமைச்சர் எங்களுக்கு உறுதியளித்தார். எங்களுக்கு எங்கள் காணி வேண்டும்."
காங்கேசன்துறையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸ விகாரையில் புனரமைக்கப்பட்ட ஸ்தூபி வைக்கும் பணி 27 ஏப்ரல் 2023 அன்று இடம்பெற்றது." என இலங்கை இராணுவம் ஏப்ரல் 29ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.
"கி.பி. 3ஆம் நூற்றாண்டில் தேவநம்பிய திஸ்ஸ மன்னன் காலத்தில் இந்த விகாரை அமைக்கப்பட்டது.” என இலங்கை இராணுவம் தெரிவிக்கின்றது.
பலாலி விமான நிலையத்திற்குத் தேவையான காணிக்கு மேலதிகமாக அந்தப் பகுதியில் இராணுவ முகாமை நடத்திச் செல்லவும் காணி அவசியம் என்பது ஜனாதிபதியின் நிலைப்பாடு என, ஜூன் 12 ஆம் திகதி வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவித்தார்.
எஞ்சிய காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பாதுகாப்புத் தலைவர்களுக்கு அறிவித்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
“பாதுகாப்புத் தரப்பினருடன் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி மிகத் தெளிவாக சொல்லியிருந்தார் பலாலி விமான நிலையம் வருவதனால் அத்தியாவசியமாக அந்த விமான நிலையத்திற்கு தேவையான காணியை தவிர்த்து, அதனைவிட இந்த பிரதேசத்தில் ஏதோ ஒரு இராணுவ முகாம் இருக்கத்தானே வேண்டும். அந்த இராணுவ முகாம் தவிர்த்து மற்றயை காணிகள் அனைத்தையும் விடுவிக்குமாறு, அதனை நான் சொல்லவில்லை ஜனாதிபதி மிகவும் தெளிவாக பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் குறிப்பிட்டுள்ளார்.”
அரசாங்க அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டமைக்கு அமைய, பலாலியில் உள்ள யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கும் தனியார் காணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பலாலியில் விமானப்படை தளத்தை விரிவுபடுத்துவதற்காக வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களுக்குச் சொந்தமான 1009.7 ஏக்கர் காணியை விமானப்படை ஏற்கனவே ஓடுபாதைக்காகப் பயன்படுத்தி வருவதாக ஜனவரி 2025 இல் ஜனாதிபதியிடம் தெரிவித்த யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், அந்த காணியில் 643 தமிழர்களுக்குச் சொந்தமான காணிகள் இருப்பதாகக் கூறியிருந்தார்.
ஏப்ரல் 26, 2025 அன்று கிளிநொச்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளில் இருந்து 'விடுவிக்கக்கூடிய' ஒவ்வொரு அங்குல காணியையும் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.