அணு ஆயுத விவகாரம் தொடர்பாக, ஈரானைக் குறிவைத்து இஸ்ரேல் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதாவது,
அணு ஆயுதத்தைத் தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, ஈரான் மீது 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் கடந்த ஜூன் 13ஆம் திகதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதற்குப் பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தாக்குதலில் ஈரானில் அதிகமான பலி எண்ணிக்கை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக, அந்நாட்டின் தளபதிகள், அணு விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு எதிராக அந்நாட்டு உச்சபட்ச தலைவர் அலி கமேனி பதிலடி கொடுத்திருந்தார். மேலும், இந்தப் போரில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா களமிறங்கியிருக்கும் நிலையில், அவற்றுக்கு எதிராக சீனா கண்டனம் தெரிவித்திருக்கும் அதேவேளை, ரஷ்யாவும் மத்தியஸ்தம் செய்வதாகத் தெரிவித்துள்ளது. மேலும், வட கொரியாவும் ஈரானுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது.
இன்றுடன் போர் 8ஆவது நாளை எட்டியிருக்கும் நிலையில், தற்போது ஈரானின் கை ஓங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அது, இஸ்ரேலின் மருத்துவமனைகள், பங்குச் சந்தை கட்டடம், குடியிருப்புகள் போன்றவற்றை அடுத்தடுத்து குறிவைத்து தாக்கி வருகிறது. இதனால், இஸ்ரேல் அச்சத்தில் உறைந்திருப்பதுடன், பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பின்னால் உள்ள ஆயுதம் குறித்து இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. அது, கிளஸ்டர் குண்டுகளைப் (Cluster Bomb) பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது. தவிர அதுகுறித்த ஆபத்துகள் குறித்தும் தன்மைகள் குறித்தும் கவலைகளை எழுப்பியுள்ளது.
ஈரான் ஏவிய ஏவுகணையின் போர்முனை சுமார் 7 கிலோமீட்டர் (4 மைல்) உயரத்தில் உடைந்து, மத்திய இஸ்ரேலிய பிரதேசத்தில் சுமார் 8 கிலோமீட்டர் (5 மைல்) சுற்றளவில் சுமார் 20 சிறிய குண்டுகளாக வெடித்துச் சிதறடித்தது. சிறிய குண்டுகளில் ஒன்று மத்திய இஸ்ரேலில் உள்ள அசோர் நகரில் உள்ள ஒரு வீட்டைத் தாக்கி சேதம் ஏற்படுத்தியுள்ளது என இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
தவிர, வெடிக்காத குண்டுகளின் ஆபத்துகள் குறித்து பொதுமக்களை எச்சரிக்கும் ஒரு கிராஃபிக் வீடியோவையும் இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டது.
கிளஸ்டர் குண்டு என்றால் என்ன?
கிளஸ்டர் குண்டு (Cluster bombs) என்பவை மிகவும் ஆபத்தான ஆயுதமாக வரையறுக்கப்பட்ட ஒன்றாகும். ஏவப்படும் ஒரு குண்டு பல சிறிய குண்டுகளாக இலக்கின் மீது விழுந்து வெடிக்கிறது. இவற்றில் சில உடனடியாக வெடிக்காமல் போகலாம். நீண்டகாலத்திற்குப் பிறகும் அவை வெடித்து பொதுமக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். எனவே கிளஸ்டர் குண்டுகளின் பயன்பாடு குறித்து சர்வதேச அளவில் சர்ச்சை நீடித்து வருகிறது.
கிளஸ்டர் குண்டுகளை உற்பத்தி செய்தல், சேமித்து வைத்தல், மாற்றுதல் மற்றும் பயன்படுத்துவதைத் தடை செய்யும் ஒரு சர்வதேச ஒப்பந்தம் 2008 இல் கையெழுத்தானது. இதில் 111 நாடுகளும் 12 பிற அமைப்புகளும் கையெழுத்திட்டன. இருப்பினும், ஈரானும் இஸ்ரேலும் இந்த ஒப்பந்தத்தில் சேர மறுத்துவிட்டன.
இதற்கிடையில், நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ரஷ்ய படைகளுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக அமெரிக்கா 2023இல் உக்ரைனுக்கு கிளஸ்டர் குண்டுகளை வழங்கியது. ரஷ்யாவும் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தியதாக உக்ரைன் குற்றம்சாட்டுகிறது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளும் கிளஸ்டர் குண்டுகளுக்கு எதிரான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.