ஈரானின் அணு நிலைகள் மீது, இஸ்ரேல் நேற்று (19) தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் மத்திய நகரான அரக்கில் உள்ள கொன்தாப்
அணு நிலை மீது தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது. நாடன்ஸ் அணு நிலை மீதும் தாக்குதல் நடத்தியதாக அது தெரிவித்தது.
கொன்தாப் அணு நிலைக்கு அருகே இரு வெடிகுண்டுகள் விழுந்ததாக ஈரான் ஊடகம் கூறி இருப்பதோடு கதிர்வீச்சு அச்சுறுத்தல் இல்லை என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
தனது அணு சக்தித் திட்டம் அமைதியான நோக்கத்தைக் கொண்டது என்று ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது. இஸ்ரேல் அணு நிலைகள் மீது நடத்தும் தாக்குதல் ‘சர்வதேச சட்டத்தை மீறும் செயல்’ என்று ஈரானின் அணு சக்தி நிறுவனம் கூறியது. குறித்த பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனறும் அது தெரிவித்துள்ளது.
ஈரான் மீது தாக்குதல் - இரு வாரங்களுக்குள் ட்ரம்ப் முடிவு செய்வார்
இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் வலுப்பெற்றுள்ள நிலையில் ஈரானுக்கு எதிராக இராணுவத் தாக்குதலை நடத்துவதா வேண்டாமா என்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முடிவு எடுப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எதிர்காலத்தில் ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான கணிசமான வாய்ப்பு உள்ளது என்ற உண்மையின் அடிப்படையில், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஈரானுக்கு செல்லலாமா வேண்டாமா என்பது முடிவு செய்யப்படும்.
ஈரானுடன் ஒரு இராஜதந்திர தீர்வுக்கு ட்ரம்ப் வழி திறந்திருந்தாலும், அவரது முக்கிய முன்னுரிமை அந்த நாடு அணு ஆயுதத்தைப் பெறுவதைத் தடுப்பதுதான். எந்தவொரு ஒப்பந்தமும் தெஹ்ரானால் யுரேனியம் செறிவூட்டலைத் தடை செய்ய வேண்டும் மற்றும் அணு ஆயுதங்களை உருவாக்கும் அதன் திறனைக் குறைக்க வேண்டும்.
ஜனாதிபதி ட்ரம்ப் எப்போதும் இராஜதந்திர தீர்வில் ஆர்வமாக உள்ளார்.அவர் ஒரு அமைதியை நிலைநாட்டுபவர். அவர் வலிமை மூலம் அமைதியை ஏற்படுத்துபவர்" என்று அவர் கூறினார்.
இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக வெஷிங்டனுக்கும், தெஹ்ரானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ரஷ்யா எச்சரிக்கை
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் பதட்டங்களைத் தொடர்ந்து, மோதலில் எந்தவொரு அமெரிக்க இராணுவத் தலையீடும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
ஈரான் மீதான தாக்குதல்களில் இஸ்ரேலுடன் இணைவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த புதன்கிழமை அறிவித்தது பதட்டங்களை அதிகரித்தது.
இந்நிலையில் மாஸ்கோவில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, "இந்த கடினமான சூழ்நிலைகளில் அமெரிக்க இராணுவத் தலையீட்டைத் தவிர்க்குமாறு வாஷிங்டனை நாங்கள் வலுவாக எச்சரிக்கிறோம்.
இது உண்மையிலேயே எதிர்பாராத எதிர்மறை விளைவுகளைக் கொண்ட மிகவும் ஆபத்தான நடவடிக்கையாக இருக்கும்" என்று கூறினார்.
முன்னதாக, ரஷிய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் இஸ்ரேலுக்கு அமெரிக்கா நேரடி இராணுவ உதவி வழங்குவதற்கு கடுமையான ஆட்சேபனை தெரிவித்தார்.
ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களால் உலகம் ஒரு பெரிய பேரழிவின் விளிம்பில் உள்ளது என்று ஜகரோவா கவலை தெரிவித்தார்.
இதற்கிடையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் ஈரான் பிரச்சனை தொடர்பாக தொலைபேசியில் பேசினார்.
மேலும் இஸ்ரேல் - ஈரான் தலைவர்களுக்கும் இடையே தொலைபேசி மூலம் மத்தியஸ்தம் செய்ய புடின் முன்வந்தார். ஆனால் டிரம்ப் அந்த வாய்ப்பை நிராகரித்தார். "முதலில் ரஷ்யாவில் உங்கள் பிரச்சினைகளை தீர்க்கவும்" என்று டிரம்ப் புடினிடம் கூறியதாக கூறப்படுகிறது.
-தமிழன்