தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடந்த அரசாங்கங்களின் போது அதிகாரத்தில் இருந்த அமைச்சர்கள் உட்பட 28
அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தொடர்பில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த நபர்கள் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் உரிய சொத்துக்களை கொள்வனவு செய்ததாக எழுந்த முறைப்பாடுகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, நாமல் ராஜபக்ஷ, மஹிந்த யாப்பா அபேவர்தன, மஹிந்த அமரவீர, சாமர சம்பத் தசநாயக்க, ரோஹித அபேகுணவர்தன, பவித்ரா வன்னியாரச்சி, கஞ்சன விஜேசேகர, சாகல ரத்நாயக்க, ஜானக திஸ்ஸகுட்டிஆரச்சி, வஜிர அபேவர்தன, மஹிபால ஹேரத், அநுர பிரியதர்ஷன யாப்பா, மனுஷ நாணாயக்கார, வடிவேல் சுரேஸ், துஷார சஞ்ஜீவ பதிரண, ஹர்ஷன ராஜகருணா, சாணக்கியன் இராசமாணிக்கம், பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சாந்த அபேசேகர ஆகியோரின் பெயர்கள் உரிய விசாரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்காலத்தில் இவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட பிரிவுக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் சொத்துக்கள் தொடர்பிலும், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
விசாரணையில் யாராவது முறைகேடாக சம்பாதித்து சொத்துக்களை வாங்கியிருப்பது தெரியவந்தால், அவை பறிமுதல் செய்யப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.