சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பதிவிடுவதன் மூலம் சில குழுக்கள் சுற்றுலாத் துறையை
குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிப்பதாக சுற்றுலா பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் சமூகம் மற்றும் சுயாதீன குழுக்களின் ஆதரவுடன் உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தை நிலைநாட்ட தேசிய மக்கள் சக்தி மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிப்பதற்காகவே இவ்வாறு செயற்படுவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
"அறுகம்பையில் பிகினி உடை உடுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு அறிக்கை சமூக ஊடகங்களில் பரவுவதைக் கண்டோம். கொழும்பு மாநகர சபை மற்றும் நமது பல முக்கியமான உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் நகராட்சிகளில், முஸ்லிம் சமூகம் மற்றும் சுயாதீன குழுக்களின் ஆதரவுடன் தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தை நிறுவுவதற்கு நாம் தயாராகி வரும் இந்த நேரத்தில், அதைச் சீர்க்குழைப்பதற்காக சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் தவறான தகவல்களைப் பரப்பும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
"சில வாரங்களுக்கு முன்பு, அறுகம்பை பிரதான வீதியில், ஒரு நபர் முழு நிர்வாணத்துடன் நடந்து சென்றுள்ளார். இச்சம்பவம் உண்மையில் நடந்தது. இது உண்மையில் ஏதோ ஒரு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட நாசவேலைச் செயலாக இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.
"முஸ்லிம் சமூகத்தின் கலாசாரம் மற்றும் அவர்களின் மத நம்பிக்கைகள் மீது எங்களுக்கு முழு மரியாதை உண்டு. மேலும், நாங்கள் பல ஆண்டுகளாக அந்தப் பகுதியில் சுற்றுலா வணிகத்தை நடத்தி வருகிறோம். இது 2025ஆம் ஆண்டில் திடீரென நடந்த ஒன்றல்ல. வங்குரோத்தாகியுள்ள அரசியல் குழுக்கள் இந்த முயற்சிகளைத் தொடர முடியும். எவ்வாறாயினும், இந்தக் குழுக்கள் அழிந்து வருகின்றன. இது அவர்களின் அரசியல் இயக்கத்தை முடக்கும் முயற்சி” என்று, அமைச்சர் மேலும் கூறினார்.