குற்றப் புலனாய்வுத் துறை நடத்திய விசாரணைகளில், எந்தவித ஆவணங்களும் இல்லாமல் 30 கைதிகள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி சிறைக் கைதிகளை விடுவிப்பது குறித்து குற்றப்புலனாய்வுத் துறை ஏற்கனவே விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையிலேயே, இந்த விடயம் பற்றி தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனியவும், தற்போது சிறையில் உள்ளார்.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட குழு, பல்வேறு பிரிவுகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் எந்த அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதேவேளை, ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட 37 நபர்கள் விடுவிக்கப்படவில்லை என்ற தகவல்களும் வெளிவந்துள்ளதாக, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் விரிவான மறுசீரமைப்பு தொடர்பில் நீதி அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது. மேலும், அனைத்து சிறைச்சாலை கண்காணிப்பாளர்களும் எதிர்வரும் 23ஆம் திகதியன்று கொழும்புக்கு வரவழைக்கப்பட்டு, அந்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் தலைமையில் கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் பிற்பகல் சிறைச்சாலைகள் பதில் ஆணையாளர் நாயகம் தலைமையில் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. சிறைச்சாலைத் திணைக்களம் எதிர்நோக்கும் தற்போதைய நிலைமை தொடர்பில் அங்கு கவனம் செலுத்தப்படும். எதிர்காலத்தில் அனைத்து சிறைச்சாலை அத்தியட்சகர்களும் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.