ஆசிரியர்களின் துன்புறுத்தல் காரணமாகத்தான் வயம்ப பல்கலைக்கழக மாணவி தற்கொலை
செய்துகொண்டார் என்று கூறி, வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிங்கிரியவில் உள்ள வயம்ப தேசிய கல்விக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கல்வி அமைச்சு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பில் வயம்ப தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி லால் குமாரவிடம் வினவியபோது, கல்வி அமைச்சு இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இது தொடர்பில் தனக்கு அறிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டா
வயம்ப தேசிய கல்விக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் சமீபத்தில் தனது விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தம் காரணமாக தற்கொலை நடந்திருக்கலாம் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, மாணவியின் தற்கொலை குறித்து, கல்வி அமைச்சு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதேவேளை, மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அந்த மாணவியின் மரணம், கழுத்தை நெரிபட்டதால் ஏற்பட்டுள்ளதென்று, பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த மரணம் தற்கொலை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட யுவதி, கண்டி - புட்டுஹப்புவ பகுதியைச் சேர்ந்த சஞ்சீவனி என்ற 23 வயது மாணவி ஆவார். சிலாபம் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் ஆசிரியர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பிறகு, பல மாணவர்களுடன் சேர்ந்து, 23ஆம் திகதியன்று மாலை, கல்லூரியின் விடுதிக்கு சென்றுள்ளார்.
அவருக்குப் பிறகு வந்த அதே விடுதியில் வசிக்கும் மற்றொரு யுவதி, அறை உள்ளே பூட்டப்பட்டிருந்ததால், மற்றவர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, சஞ்சீவனி என்ற யுவதி, வெள்ளை நிற சேலையுடன் மின்விசிறியில் தொங்கியபடி காணப்பட்டுள்ளார்..
உடனடியாக பிங்கிரிய மாவட்ட மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றபோது, அங்கிருந்து அவர் சிலாபம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
ஆசிரியர்களால் ஏற்பட்ட துன்புறுத்தலால் இந்த மாணவரின் மரணம் ஏற்பட்டதாகக் கூறி, வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்கள் நேற்று முன்தினம் (24) இரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பீடாதிபதி வந்து இது தொடர்பாக பதிலளிக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று, மாணவர்கள் கோரினர். இருப்பினும், வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி வந்து வாக்குறுதி அளித்ததை அடுத்து, மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட முடிவு செய்தனர்.
இதனையடுத்து பேசிய பீடாதிபதி: "கல்வியியல் கல்லூரிகளில் ஒரே ஒரு பாரம்பரியம்தான் உள்ளது. தவிர, இந்தப் பிள்ளைகளை நாம் ஆபத்தில் ஆழ்த்த மாட்டோம். இந்த மரணத்திற்கு மன அழுத்தம் காரணமா என்று சொல்ல எனக்கு எந்த தகவலும் இல்லை. ஆனால், அந்தப் பிள்ளை இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு வீட்டிற்குச் சென்றுவிட்டார். அங்கு அவர் தனது சகோதரிகளிடம், தனக்கு இந்த வாழ்க்கை வெறுத்து விட்டதாகவும் தான் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும், கடும் மன அழுத்தத்தில் கூறியுள்ளார்” என்று பீடாதிபதி கூறினார்.