கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த பாடசாலை மாணவி தொடர்பில் கல்வி அமைச்சின் ஊடாக நடவடிக்கை
எடுத்து வருவதாக, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
உயிரிழந்த மாணவியின் பெற்றோர், கடந்த ஞாயிற்றுக்கிழமை (04.05.2025) ஊடகச் சந்திப்பை நடத்தி, சம்பவம் தொடர்பான விபரங்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில், அரசியல் முக்கியஸ்தர்கள், சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்தும், பாதிக்கப்பட்ட மாணவிக்காக குரல்கள் எழுப்பப்பட்டன.
இதனையடுத்து, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜூக்கு எமது ஊடகத்திலிருந்து மாணவி விவகாரம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அவரும் அதற்கு உரிய நடவடிக்கையை கல்வி அமைச்சின் மூலம் எடுப்போம் என உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மாணவியின் உயிரிழப்பு விவகாரத்தை விசாரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.