தென்மேற்கு வங்கக்கடலில்
உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பு நேற்று (26) முற்பகல் 11:00 மணியளவில் மட்டக்களப்புக்கு சுமார் 170 கிலோமீற்றர் மற்றும் திருகோணமலைக்கு 240 கிலோமீற்றர் தொலைவில் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டிருந்ததுடன், அது நாட்டின் கிழக்குக் கரையை நெருங்கி இன்று (27) புயலாக மேலும் வலுவடையும்.
இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானம் நிலவும். வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மிக அதிக மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான இடங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும்.
கடற்பரப்புகளுக்கான அதன் ஆலோசனையில், நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை வேகத்தில் காற்று வீசுவதுடன், மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டைச் சூழவுள்ள சில இடங்களில் மிக பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சுமார் 2.5-3.0 மீ உயரம் (இது நிலப்பரப்புக்கானது அல்ல) அலைகள் அதிகரிக்கலாம். மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரப் பகுதிகளுக்கு அண்மித்த கடற்பரப்புகளில் அலைகள் சீற்றம் காரணமாக எழுச்சியுடன் காணப்படும்.
மறு அறிவித்தல் வரும் வரை நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்கள் அவசர உதவிக்காக உள்ளூர் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறும் இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் குறித்து அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
பொதுமக்கள் 0112 027 148, 0112 472 757, 0112 430 912 மற்றும் 0112 013 051 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.