குவைத்தில் தண்டனை
அனுபவித்துவரும் 104 இலங்கை கைதிகளில் 32 பேர் இந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று (25) மாலை குவைத்திலிருந்து விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இந்தக் கைதிகள் குவைத் அரசின் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குவைத் அரசுக்கும் இலங்கைக்கும் இடையில் 2007 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் அவர்கள் இந்நாட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
குவைத்தில் போதைப்பொருள் பாவனை, வர்த்தகம் மற்றும் கடத்தல் மற்றும் போக்குவரத்து ஆகிய குற்றச்சாட்டின் பேரில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றவாளிகளாகக் காணப்பட்ட ஒரு குழுவே இந்த இலங்கைக் கைதிகள்.
குறித்த கைதிகளுடன் குவைத் அரசின் பாதுகாப்பு அதிகாரிகள், அந்நாட்டு உள்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் அடங்கிய குழுவும் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குவைத் விமானப் படைக்குச. சொந்தமான விமானம் இன்று (25) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தடைந்தடைந்தது.
இதனையடுத்து கைதிகள் குழு வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.