(பாறூக் ஷிகான்)
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை
மாவட்டத்தில் பெய்யும் மழையினால் தாழ் நிலங்களில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலையினால் இலங்கையின் கிழக்கு பிராந்தியத்தில் இடியுடன் கூடிய மழைக்கு மேலும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே சகல மக்களும் அவதானமாக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
மேலும் மேலதிக வெள்ள நீர் வடிந்தோட அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு சின்னமுகத்துவார கழிமுகம் வெட்டப்பட்டுள்ளது.
ஒரு பாரிய அனர்த்தத்தை எதிர்கொள்ள அம்பாறை மாவட்ட மற்றும் கிழக்கு வாழ் மக்கள் தயாராக இருக்குமாறும் மேலும் மூன்று நாட்களுக்கு அதிக மழை பெய்யும் என்பதால் முன்னாயத்த நடவடிக்கைகளில் இளைஞர்கள் உள்ளூர் சமூக நிறுவனங்கள் அவசரமாக களத்தில் இறங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை, துறைவந்தியமேடு போன்ற தாழ்நில பகுதிகளில் வெள்ள நீர் பெருக ஆரம்பித்துள்ளன.

தொடர்ச்சியாக கன மழை பெய்வதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் நாளாந்த கூலி வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தங்கள் இடம்பெறும் இடங்களுக்கு கூட்டம் கூட்டமாக பார்வையிடச் செல்வதை தவிர்த்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
நீர் வடிந்தோடுவதற்காக சில முகத்துவாரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் வெள்ள நீர் தொடர்ந்து தேங்கியே காணப்படுகிறது.
பெரிய நீலாவணை, பாண்டிருப்பு , நற்பிட்டிமுனை , சேனைக்குடியிருப்பு ,காரைதீவு, சம்மாந்துறை, அக்கரைப்பற்று,பகுதிகளில் இப்பிரதேசத்தில் பல குடும்பங்கள் வெள்ளத்தினால் நிர்க்கதிக்குள்ளாகி உள்ளதுடன் தற்போது அங்குள்ள மக்கள் வீடுகளுக்குள் மழை வெள்ளம் உட்புகும் நிலை ஏற்பட்டுள்ளது.