(பாறுக் ஷிஹான்)
கைத்துப்பாக்கி மற்றும் 143 தோட்டாக்களுடன்
கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரரிடம் மேலதிக விசாரணைகள் பல கோணங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை வாவின்ன பரகஹகலே பகுதியில் வைத்து கடந்த 17 ஆம் திகதி கைது செய்யப்பட்ட நபர் பின்னர் இகினியாகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அம்பாறை விசேட அதிரடிப் படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் இகினியாகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாவின்ன பரகஹகலே பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ ரக தானியங்கி கைத்துப்பாக்கி மற்றும் 143 தோட்டாக்கள் மற்றும் இரண்டு தோட்டா மெகசீன்கள் மற்றும் ஆயுதங்களை சுத்தம் செய்யும் கருவியை தம்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் 51 வயதான ஓய்வுபெற்ற இராணுவ சிறப்புப் படை வீரராவார்.
அவரது வீட்டுக் காணியில் புதைக்கப்பட்டிருந்த குறித்த 9 எம்.எம் துப்பாக்கி மற்றும் 143 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அத்துடன் துப்பாக்கியின் இலக்கம் அழிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் தொடர்பிலும் துப்பாக்கி தொடர்பிலும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் சந்தேநக நபர் குறித்த துப்பாக்கியை போர் நடைபெற்ற காலத்தில் வட பகுதியில் கடமையில் இருந்து எடுத்து வந்தாரா அல்லது விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் பாவித்த துப்பாக்கியா அல்லது இராணுவ களஞ்சிய சாலையில் இருந்து எடுக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டதா என பல கோணங்களில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.