இளைஞன் உயிர் மாய்த்த சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் அளிக்க சென்ற வயோதிப பெண்ணொருவர் பொலிஸ் நிலையத்தில்

மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் 4 ஆம் குறுக்கு தெரு பகுதியில் வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த மல்லாவி துணுக்காய் பகுதியை சேர்ந்த ஜே. தேவரஞ்சன் (வயது 31) எனும் இளைஞன் (12) ஆம் திகதி இரவு தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார், இளைஞன் தங்கியிருந்த வீட்டின் மற்றுமொரு அறையில் தங்கியிருந்த வயோதிப பெண்மணியை வாக்குமூலம் வழங்க வருமாறு நேற்றைய தினம் (13) யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்திருந்தனர்

அதன் அடிப்படையில் வாக்குமூலம் அளிக்க பொலிஸ் நிலையம் சென்றிருந்த பெண்மணி, திடீர் சுகவீனமுற்று பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

அதனை அடுத்து நோயாளர் காவு வண்டி மூலம் பெண்மணியை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போது, பெண்மணி உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், திடீர் மரண விசாரணை அதிகாரி ந. பிரேமகுமார் மரண விசாரணைகளை முன்னெடுத்தார்.

அதன் போது, வயோதிப பெண்மணியின் உறவினர்கள் கொழும்பில் வசித்து வருவதாகவும், யாழ்ப்பாணத்தில் தனியாகவே வசித்து வந்ததாகவும், மலர் என அழைக்கப்படும் அவரது வயது 75 என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை உயிர்மாய்த்த இளைஞன், கடந்த சில தினங்களாக மனவிரக்தியில் காணப்பட்டதாகவும், 12 ஆம் திகதி இரவு சத்தி எடுத்தார் எனவும், அவருக்கு தேநீர் ஊற்றி கொடுத்து விட்டு, தூங்க சென்ற பின்னர் இளைஞன் இவ்வாறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பார் என தான் எதிர்பார்க்கவில்லை என வயோதிப பெண்மணி பொலிஸாருக்கு தெரிவித்து, இளைஞனின் உயிர் இழப்பில் கவலையில் இருந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.



-யாழ். நிருபர் பிரதீபன்-

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி