“ஊழல், மோசடிகளில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் மலையக அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படமாட்டாதா? அவர்களுடன் ஏதேனும்
இணக்கப்பாடு உள்ளதா? என சில ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மலையகத்திலுள்ள கட்சிகளுடன் எமக்கு எவ்வித டீலும் கிடையாது. ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டம் தனக்குரிய கடமையை நிறைவேற்றும்” என்று, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
செம்மணி புதைகுழி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப்பணி மற்றும் விசாரணைகளுக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது என்றும் அவர் கூறினார்.
ஹட்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
"ஐக்கிய தேசியக் கட்சியாலேயே அன்று கறுப்பு ஜூலைக் கலவரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. நிலைமை இவ்வாறு இருக்க, ஜே.வி.பியினரே தமிழர்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர் என்ற மிகவும் சூட்சுமமான முறையில் போலிப்பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.
“செம்மணி மனித புதைகுழி தொடர்பில் பூரண விசாரணைக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிக்கொண்டிருக்கின்றது.
“இந்நாட்டில் இனவாதம் மற்றும் மதவாதம் என்பன அதிகாரத்துக்காக பயன்படுத்தப்பட்டன. ஊழல், மோசடிகளை மூடிமறைப்பதற்கான அவை பயன்படுத்தப்பட்டன. எனினும், இந்நாட்டில் இனி இனவாதம் மற்றும் மதவாதத்துக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இடமளிக்காது. அரசியல் அதிகாரத்துக்காக இனவாதம், மதவாதத்தை பயன்படுத்த இடமளிக்கமாட்டோம்.
“புதிய கலாசாரம், முறைமை மாற்றம், சமூக மாற்றம் என்பவற்றுக்காகவே நாம் ஆட்சிக்கு வந்துள்ளோம். எமக்கென தெளிவான பாதை உள்ளது. அந்த வழியில் மாற்றத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றோம். மக்கள் எதிர்பார்க்கும் இலங்கை நிச்சயம் உருவாக்கப்படும்" - என்றார்.