தனது மனைவி, மனைவியின் தாய் மற்றும் மனைவியின் சகோதரி ஆகியோரைப் பொல்லால் தாக்கிய குடும்பஸ்தர் ஒருவர், அவர்கள்
மீது பெற்றோல் ஊற்றித் தீயிட்ட சம்பவமொன்று மொரட்டுவ – லுனாவ பிரதேசத்தில் இன்று (24) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் தீக்காயங்களுக்கு ஆளான மேற்படி பெண்கள் மூவரும், பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரண்டு பிள்ளைகளின் தாயான சந்தேகநபரின் மனைவி (28) மற்றும் மனைவியின் தாய் மற்றும் மைத்துனி ஆகியோரே இவ்வாறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
குடும்ப தகராறு காரணமாகவே இந்த குற்றச்செயல் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் பாதிகப்பட்ட மனைவி, வெளிநாட்டிலிருந்து சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இலங்கைக்குத் திரும்பிய நிலையில், மீண்டும் வெளிநாடு செல்லத் தயாராகியுள்ளார் என்றும் கணவர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், இந்தப் பிரச்சினை நீதிமன்றம் வரை எட்டியதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, அனைவரும் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்திற்குச் சென்று வீடு திரும்பிய பின்னர் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபரின் மனைவி மற்றும் மாமியார் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், சந்தேகநபர் தனது மனைவி மீது “அசிட் வீசுவேன் அல்லது வெளிநாடு செல்வதைத் தடுப்பேன்” என்று பலரிடம் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் ஒரு சிவில் பாதுகாப்பு வீரர் என்றும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மொரட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.