அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த போர் நிறுத்தத்தை இஸ்ரேலும் கடைப்பிடித்தால் மட்டுமே அதற்கு மதிப்பளிப்பதாக
ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் கூறியுள்ளார்.
"சியோனிச ஆட்சி போர் நிறுத்தத்தை மீறவில்லை என்றால், ஈரானும் செய்யாது" என்று மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமுடனான தொலைபேசி உரையாடலில் பெசெஷ்கியன் கூறியதாக வெளிநாட்டு இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இஸ்ரேல்- ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதாக கூறியிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தற்போது இருநாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் இருநாடுகள் மீதும் தனக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் கூறிய டிரம்ப், குறிப்பாக இஸ்ரேல் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் ஆதங்கப்பட்டுள்ளார்.
குண்டுவீச்சை நிறுத்திவிட்டு "உங்கள் விமானிகளை இப்போதே அழைத்து வாருங்கள்" என்று அவர் வலியுறுத்தியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலுக்கு கடுமையான எச்சரிக்கையையும் அவர் விடுத்துள்ளார்.
"குண்டு வீச வேண்டாம்" அது ஒரு "பெரிய மீறல்" என்று டொனால்ட் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.