அணு ஆயுத விவகாரம் தொடர்பாக, ஈரானைக் குறிவைத்து இஸ்ரேல் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதாவது,
அணு ஆயுதத்தைத் தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி ஈரான் மீது 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் கடந்த ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதற்குப் பதிலடியாக ஈரானுமும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இருநாடுகளும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களத்தில் குதித்தது. தவிர, ’ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ என்ற பெயரில் அமெரிக்கா, ஈரானின் அணுசக்தி மையங்களான ஃபோர்டோ, நடான்ஸ், மற்றும் இஸ்பஹான் ஆகியவற்றைத் தாக்கியது.
இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. தவிர, ட்ரம்பின் இந்தச் செயலுக்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையே, இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்த ஈரான், இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இதில், குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, தற்போது இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ”இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம், தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. தயவுசெய்து அதை மீறாதீர்கள்" என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஒரு முழுமையான மற்றும் மொத்த போர் நிறுத்தம் அடுத்த 12 மணி நேரத்தில் அமலுக்கு வரும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. அதன் பிறகு போர் முடிவுக்கு வந்ததாகக் கருதப்படும்! அதிகாரப்பூர்வமாக, ஈரான் மற்றும் இஸ்ரேல் போர் நிறுத்தத்தைத் தொடங்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து, ஈரானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது. அதுபோல், இஸ்ரேலும் ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியானது. முன்னதாக, அமெரிக்கா ஆபரேஷன் மிட்நைட் ஹேமருடன் இணைந்து ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்களை குண்டுவீசித் தாக்கிய பிறகு, மத்திய கிழக்கில் உலகளாவிய போர் விரிவடையும் என பீதி கிளம்பிய நிலையில், தற்போது 12 நாள் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பது உலகிற்கு நிம்மதியை அளித்துள்ளதாக பார்க்கப்பட்டது. இருப்பினும், ஈரான் அதிகாரப்பூர்வமாக போர் நிறுத்த அறிவிப்பை வெளியிடவில்லை என்றே தெரிகிறது. மீண்டும் இருநாடுகளுக்கு இடையே மோதல் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. போர் நிறுத்தத்தை மீறி ஈரான் இஸ்ரேலின் வடக்கு பகுதியில் தாக்குதல் நடத்தி வருவதை இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. அதனால், போர் நிறுத்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை என்றே தெரிகிறது.
முன்னதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போர் நிறுத்தம் வந்துவிட்டதாகக் கூறியிருந்தார். ஆனால், ஈரானோ அதை மறுத்திருந்தது. போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் அமெரிக்காவிடமிருந்து எந்தவிதமான முன்மொழிவையும் பெறவில்லை என்று ஈரான் கூறியிருந்தது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, "இப்போதைக்கு, எந்தவிதமான போர் நிறுத்தம் அல்லது உடன்படிக்கையும் இல்லை. இருப்பினும், ஈரான் மக்களுக்கு எதிரான நடவடிக்கையை இஸ்ரேல் நிறுத்தினால் அதன் பிறகு எங்கள் நடவடிக்கைகளைத் தொடரும் எண்ணம் இல்லை.எங்கள் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும்" என்றே கூறியிருந்தார்.
மறுபுறம் போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் தொடர்ந்து மவுனம் காத்தது. இதனால் போர் முடிந்துவிட்டதா.. இல்லை தொடருமா என்பதில் தெளிவு இல்லாமல் குழப்பமே நீடித்து வருகிறது. எப்பொழுது இது நிரந்தரமாக முடிவுக்கு வரும் என்றே பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.