கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதாகி நடிகர் ஸ்ரீகாந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே
குண்டர் சட்டத்தில் வேறொரு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் மூலம்தான் நடிகர் ஸ்ரீகாந்திற்கு கொக்கைன் போதைப்பொருள் கிடைத்துள்ளதை பொலிஸார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.
இதனால், நடிகர் ஸ்ரீகாந்த், பிரசாத் ஆகிய 2 நபர்களையும் ஒன்றாக போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நுங்கம்பாக்கம் பொலிஸார் முடிவு செய்துள்ளனர். பிரசாத் மூலமாக 8 முறை ஸ்ரீகாந்திற்கு கொக்கைன் சப்ளையாகி உள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இருவருக்கும் இடையே பண பரிவர்த்தனைகளும் நடந்துள்ளது.
அதனால், 2 நபர்களையும் ஒன்றாக வைத்து விசாரித்தால்தான் பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என்ற அடிப்படையில் ஒன்றாக பொலிஸ் காவலில் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் ஸ்ரீகாந்தையும், பிரசாத்தையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான மனுவை எழும்பூர் நீதிமன்றத்தில் நுங்கம்பாக்கம் பொலிஸார் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில்தான், கைதான நடிகர் ஸ்ரீகாந்த் பொலிஸில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை அதிகாலையில்தான் துபாயிலிருந்து நடிகர் ஸ்ரீகாந்த் விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். அன்று இரவு நுங்கம்பாக்கம் வீட்டில் கொக்கைன் பார்ட்டியை நடத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தரப்பில் கூறப்படுகிறது. சனிக்கிழமை கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்.
அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் கைது செய்யப்படுவதற்கு முன்பே அவரிடமிருந்து கொக்கைன் பாக்கெட்டாக வாங்கியதாகவும், அதனை சனிக்கிழமை நடந்த பார்ட்டியில் ஸ்ரீகாந்த் பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரசாத் சிறைக்கு செல்வதற்கு முன்னதாக 250 கிராம் கொக்கைன் கொடுத்தாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தனக்கு பிரசாத் மட்டுமே தெரியும். அவரிடம்தான் கொகைன் போதைப்பொருள் வாங்கியதாகவும் நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குமூலம் அளித்துள்ளார். பிரசாத் தன்னை வைத்து படம் தயாரித்துள்ளார். அப்போது எனக்கு ரூ. 10 லட்சம் பிரசாத் தரவேண்டும். அதனை கேட்கும் போது கொக்கைன் போதைப்பொருள் கொடுத்து பிரசாத் தான் பழக்கத்தை ஏற்படுத்தியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல் பயன்படுத்திய பிறகு மீண்டும் மீண்டும் அவர்தான் இந்த பழக்கத்தை தனக்கு ஏற்படுத்தியதாகவும், பணம் கேட்கும் போதெல்லாம் கொக்கைன் கொடுக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தினார். மூன்று முறை பயன்படுத்திய பின்பு நானே கேட்கும் அளவுக்கு அடிமையானேன் என்றும் ஸ்ரீகாந்த் வாக்குமூலம் அளித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஸ்ரீகாந்த் சொன்னது குறித்த பின்னணியை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார், இந்த வழக்கில் ஏற்கனவே கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரதீப் குமாரின் நண்பர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.