குச்சவெளி மற்றும் மூதூர் பிரதேச சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும்
இலங்கை தமிழரசுக் கட்சி ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
திருகோணமலை நகரில் வைத்து இன்று (27) கைச்சாத்திடப்பட்ட குறித்த உடன்படிக்கையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசனும் கையொப்பமிட்டனர்.
இது குறித்து சண்முகம் குகதாசன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
“திருகோணமலை மாநகர சபை, பட்டினமும் சூழலும் பிரதேச சபை மற்றும் தம்பலகாமம் பிரதேச சபை ஆகியவற்றில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸுடன் புரிந்துணர்வு அடிப்படையில் ஆட்சியமைப்போம்.
உடன்படிக்கையின் அடிப்படையில், முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்தில் அவர்களது பெரும்பான்மை எங்கு இருக்குமோ அங்கு ஆட்சியமைப்பர்.
அதே போன்று இலங்கைத் தமிழரசுக் கட்சி பெரும்பான்மை உள்ள இடத்தில் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்கும். நிதி ஒதுக்கீடு, நிர்வாகம் மற்றும் அதிகார பரவலாக்கம் உள்ளிட்ட மேலும் பல நிபந்தனைகளோடு இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
குச்சவெளி பிரதேச சபையில் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் ஒருவர் தவிசாளராகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர் பிரதி தவிசாளராகவும் செயற்படுவர்.
குச்சவெளி பிரதேச சபையில் அடுத்து வரும் இரண்டு ஆண்டுகள் தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர் தவிசாளராகவும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் பிரதி தவிசாளராகவும் செயற்படுவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.