கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவம் தொடர்பாக,
குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதற்கு எதிராக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை, ஜூன் 17ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று (22) முடிவு செய்தது.
இந்த மனு. உயர் நீதிமன்ற நீதியரசர்களான மஹிந்த சமயவர்தன மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய அமர்வு முன் பரிசீலிக்கப்பட்டது.
பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த மனுவில், சி.ஐ.டியின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முத்துமாலி, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பாதுகாப்பு அமைச்சர் அனுர திசாநாயக்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக மட்டக்களப்பில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பிள்ளையான், ஏப்ரல் 8ஆம் திகதி அங்கு வந்த குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 12ஆம் திகதி, பாதுகாப்பு அமைச்சர் அனுர திசாநாயக்க, அவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார்.