உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில்
விடுவிக்கப்பட்டிருந்த 10 ஆண் சந்தேக நபர்களையும், இரண்டு பெண் சந்தேக நபர்களையும் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (16) உத்தரவிட்டது.
இந்த சந்தேகநபர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பயங்கரவாத விசாரணைப் பிரிவு, அவர்களுக்கு எதிரான விசாரணைகளை முடித்து, மேற்படி பிரதம நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
பிரதம நீதவானிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் படி, இந்த முறைப்பாட்டை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
அதன்படி, சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களை விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டார்.
சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்து, இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டபோது, அவர்களிடம் இருந்து பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட கைபேசிகள் உள்ளிட்ட வழக்கு பொருட்களை அவர்களுக்கு விடுவிக்க உத்தரவிடுமாறு கோரினார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட பொருட்களை சந்தேக நபர்களுக்கு விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.