தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட பொது ஆணையை அபகரிக்க முயற்சித்தால்,
கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, எதிர்க்கட்சிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் தனக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருப்பதாகவும் அவர் நினைவூட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று (14) நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) 60ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, 267 உள்ளூராட்சிமன்றங்களை நிர்வகிப்பதற்கான ஆணையை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது என்றும், முதல் நாளிலேயே 152 உள்ளூராட்சி மன்றங்களிலும், மீதமுள்ள 115 சபைகளிலும் விரைவில் ஆட்சியை நிறுவத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
எதிர்க்கட்சிகளுக்கு ஆட்சி செய்வதற்கான ஆணை இல்லை என்றும், சில கட்சிகள் ஒரு சபையில் ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்களை மட்டுமே பெற்றுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
பொது ஆணையை எதிர்த்து உருவாக்கப்பட்ட எந்தவொரு சபையும், மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு மேல் நீடிக்காது என்று அவர் எச்சரித்தார்.