இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் கனடாவில் தமிழின அழிப்பு வுத்தூபியை அமைப்பதற்கு
அனுமதி வழங்கப்பட்டமை குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் எரிக்வோல்ஷிடம் தனது கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குக் கனடாத் தூதுவரை இன்று அழைத்து வெளிவிவகார அமைச்சர் தனது கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளதாவது:-
'ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள், அது தொடர்பில்
நினைவுத்தூபியை ஸ்தாபிப்பதற்கு அனுமதி வழங்கியமை குறித்த இலங்கை அரசின் கடும் ஆட்சேபனையை இலங்கைக்கான கனடாவின் உயர்ஸ்தானிகரிடம் இன்று வெளியிட்டேன்.
இலங்கையின் பன்முகதன்மை கொண்டே சமூகங்களிடையே தேசிய ஒற்றுமை தேசிய நல்லிணக்கம் மற்றும் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கான அரசின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு இது தடையாகவும் விளங்கும் சிக்கலை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
'இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின்போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான அதிகாரியாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படாததுடன், அவை தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகள் என இலங்கை அரசு தொடர்ந்தும் வலியுறுத்துகின்றது. இந்தப் பொய்யான கதையை இலங்கை முற்றிலும் நிராகரிப்பதுடன், கனடாவுக்குள் தத்தமது தேர்தல் ஆதாயங்களுக்காக இவ்வாறு பிரசாரம் செய்யப்பட்டுள்ளதாக நம்புகின்றது.
2021, ஏப்ரலில், கனடாவின் வெளிநாட்டு அலுவல்கள், வர்த்தகம் மற்றும் அபிவிருத்தித் திணைக்களம், இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக எந்தவொரு கண்டுபிடிப்பையும் கனடா அரசு மேற்கொள்ளவில்லை என்பதை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலதிகமாக, 2006இல் கனடாவானது, தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பொன்றாக அறிவித்ததுடன், 2024 ஜூனில் இவ்வகைப்படுத்தலை மீண்டும் உறுதிப்படுத்தியது.
கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள சிங்க்வகௌசி பூங்காவில், தமிழ் இனப் படுகொலையைக் குறிக்குமுகமாக நினைவுச்சின்னமொன்றை நிர்மாணிப்பது குறித்து, இலங்கை அரசு பலமுறை தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. பிராம்ப்டன் நகரசபையின் இந்த வருந்தத்தக்க முயற்சியைத் தலையிட்டுத் தடுக்குமாறு, கனடாவின் மத்திய அரசை இலங்கை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
இந்தச் செயற்பாடு குறித்த முன்னெடுப்புக்களை, பரந்தளவிலான இலங்கை மற்றும் கனேடிய சமூகங்களுக்கு எதிரானதான ஒன்றாகவே இலங்கை அரசு கருதுகின்றது. இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவதும், கட்டுக்கதைகளை அடிப்படையாகக் கொண்ட நினைவுச் சின்னங்களை நிர்மாணிப்பதும் பொதுமக்களை தவறாக வழிநடத்துவது மட்டுமல்லாமல், அனைத்து சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை மற்றும் நீடித்த அமைதிக்கான இலங்கையின் அயராத முயற்சிகளைச் சீர்குலைப்பவையாக அமையும் என்று இலங்கை அரசு உறுதியாக நம்புகிறது.
இது தொடர்பில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் இன்று கனேடிய உயர் ஸ்தானிகரைச் சந்தித்து, ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட நினைவுச் சின்னத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்புதல் தொடர்பில், இலங்கை அரசின் கடுமையான ஆட்சேபனைகளை மீண்டும் வலியுறுத்தியதுடன், இந்த முன்னெடுப்புக்கள் நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான அரசின் முயற்சிகளை சிக்கலாக்குவதுடன், அவற்றை பெரிதும் பலவீனப்படுத்துகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்' என்றுள்ளது.