பாராளுமன்றம், எதிர்வரும் மே மாதம் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடவிருப்பதாகப் பாராளுமன்ற
செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
இந்த இரண்டு தினங்களுக்கான பாராளுமன்ற அலவல்கள் குறித்து சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (02) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
அதற்கமைய, மே மாதம் 8ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் “அ” அட்டவணையின் ஒழுங்குவிதிகளின் கீழ் இறக்குமதித் தீர்வைக் கட்டணங்கள் தொடர்பில் 2025.04.09ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2025.01.27ஆம் திகதியிடப்பட்ட 2421/05 வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
மே மாதம் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, மு.ப. 11.30 முதல் பி.ப. 5.00 மணிவரை 06 தனியார் உறுப்பினர் பிரேரணைகள் தொடர்பான விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைய, பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களால் கொண்டுவரப்படும் இலங்கைப் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் அரச தலைவர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைகள் அனுபவிக்கின்ற சிறப்புரிமைகளை பொருத்தமான வகையில் குறைத்தல் தொடர்பான பிரேரணை, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார அவர்களினால் கொண்டுவரப்படும், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி மற்றும் விநியோகத்தின் போது அரச துறையின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்கான வேலைத் திட்டமொன்றைத் தயாரித்தல் குறித்த பிரேரணையும், பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி அவர்களினால் கொண்டுவரப்படும் கணக்காய்வு அறிக்கைகளின் ஊடாக முன்வைக்கப்படுகின்ற பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல் தொடர்பான பிரேரணையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களினால் கொண்டுவரப்படும் இலங்கையிலுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாழ்வதற்கு ஒரு வீட்டை வழங்குதல் தொடர்பான பிரேரணையும், பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார அவர்களினால் கொண்டுவரப்படும் பொதுப் போக்குவரத்து தர நிர்ணயங்களுக்கமைவான பேரூந்துகளை மாத்திரம் நாட்டுக்குக் கொண்டுவருதல் தொடர்பான சட்டங்களை ஆக்குதல் பற்றிய பிரேரணையும், பாராளுமன்ற உறுப்பினர் லால் பிரேமநாத் அவர்களினால் கொண்டுவரப்படும் இலங்கை “அபிவிருத்தி முன்மொழிவுகள்” என்ற பெயரில் இதுவரை நிர்மாணிக்கப்பட்டுள்ள எனினும் எவ்வித பயன்பாடுகளுக்கும் உட்படாத அனைத்துக் கட்டடங்களையும் மக்கள் பயன்பாட்டிற்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்த பிரேரணையும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.