ஜூலை மாதம் முதல் மின்சாரக் கட்டணங்களை சுமார் ஐம்பது சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று,
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது.
இருப்பினும், இந்த முன்மொழிவை முற்றிலுமாக நிராகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கலந்து கொண்ட இந்த சிறப்புக் கூட்டத்தின் போது, இலங்கை மின்சார சபை அதிகாரிகள் இந்த முன்மொழிவை முன்வைத்தனர், ஆனால் ஜனாதிபதி அதற்கு உடன்படவில்லை என்றும் அவ்வதிகாரி கூறியுள்ளார்.
மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படாவிட்டால், நிதி ரீதியாக மின்சார சபை நிலையற்றதாகிவிடும் என்று அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியமும் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க பரிந்துரைத்துள்ளதாகவும் மின்சார சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இருப்பினும், தற்போதைய நிலையில் மின்சாரக் கட்டணங்களைப் பராமரிப்பதால் நிதி ஸ்திரமின்மை ஏற்படாது என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சர்வதேச நாணய நிதியம் அதன் நான்காவது கடன் தவணையை வெளியிடுவதற்கு முன்பு மின்சார செலவைப் பிரதிபலிக்கும் ஒரு கட்டணத்தை அறிவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.