2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையன்று, கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம் மற்றும் கட்டுவாபிட்டியில் உள்ள புனித செபஸ்டியன் தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் உயிரிழந்த 167 கத்தோலிக்கர்களை, “விசுவாச சாட்சிகள்” என்று பெயரிட, வத்திக்கான் முடிவு செய்துள்ளதாக, கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்தார்.
கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தில் இன்று (21) வணக்கத்திற்குரிய மெல்கம் ஆண்டகை அவர்கள் தலைமையில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டின் போதே, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை விசுவாச சாட்சிகளாக நியமிக்குமாறு வத்திக்கானின் புனித பாப்பரசர் பிரான்சிஸிடம் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விடுத்த கோரிக்கையை பரிசீலித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை வத்திக்கான் விடுத்ததாக, ஆண்டகை தெரிவித்தார்.
இதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு தொடர்க் குண்டு தாக்குதல் விவகாரம் மீண்டும் சூடுபிடித்திருக்கும் சமயத்தில் இலங்கையின் கிறிஸ்தவ திருச்சபைக்கு மேலும் உத்வேகம் கொடுக்கும் விதத்தில் ஓர் அறிவிப்பை வத்திக்கானிலிருந்து திருச்சபை தலைமை வெளியிடவிருந்தது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்த அனைவரையும் 'விசுவாச மாவீரர்கள்' (Heroes of Faith) என்று பிரகடனப்படுத்துகின்றது கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தலைமையகமான வத்திக்கான்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை இந்த அறிவிப்பை வத்திக்கான் வெளியிடவிருந்ததாக அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களை 'விசுவாச மாவீரர்கள்' என்று பிரகடனப்படுத்தும் இந்த அறிவிப்பு, அவர்களின் மரணத்திற்குக் காரணமானவர்களைப் பொறுப்பு கூற வைக்கச் செய்யும் நடவடிக்கையின் ஓர் அங்கமாகவும் கூட நோக்கப்படக்கூடியதுதான்.
இதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஈடுபட்டார் என்ற தகவலை நிராகரிக்க முடியாது என்று கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிறில் காமினி தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நேற்று சிறப்பு அறிக்கையை வெளியிட்டபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
“பிள்ளையானுக்கும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சேனல் 4 ஒளிபரப்பிய ஆவணப்படத்தில் முதன்முதலில் வெளிப்படுத்தப்பட்டது.
இதை பிள்ளையானின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் ஆசாத் மௌலானா தகவல் வெளியிட்டிருந்தார்.
பிள்ளையானுடன் மிக நெருக்கமாக பணியாற்றிய ஒருவராகும். அந்த நபர்தான் பிள்ளையானுக்கு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் உள்ள தொடர்பை வெளிப்படுத்தினார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளில் பிள்ளையான் இப்போது கைது செய்யப்படவில்லை. கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் பிள்ளையானின் தொடர்பை நாம் நிராகரிக்க முடியாது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான இந்தக் கைதும் விசாரணையும் எந்த அளவிற்கு நடைபெறும் என்பது எங்களுக்குத் தெரியாது.
அது குற்ற புலனாய்வு பிரிவிற்கு தெரியும். இதில் பிள்ளையானுக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. வெகுமதிகள் உள்ளன என்பது எங்களுக்குத் தெரியும்.
பிள்ளையான் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை முடிந்ததும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணையை குற்றப் புலனாய்வுத் துறை தொடங்கும் என நாங்கள் நம்புகிறோம்.
இந்தத் தொடர்பை உண்மையில் ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும் என்றால், இவ்வளவு பெரிய படுகொலைக்கும், இவ்வளவு காட்டுமிராண்டித்தனமான செயலுக்கும் என்ன வழிவகுத்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.