விபத்துக்குள்ளான விமானம் குறித்து விசாரணை நடத்துவதற்காக விமானப்படைத் தளபதி
ஏர் மார்ஷல் பந்து எதிரிசிங்கவினால், ஏழு பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் உள்ள இலங்கை விமானப்படையின் இல. 05 போர் விமானப் படைக்கு நியமிக்கப்பட்ட விமானிகளின் மேம்பட்ட பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் K-8 விமானம், இன்று (21) காலை குருநாகல் - வாரியபொல பகுதியில், பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது.
விமானத்தின் இரண்டு விமானிகளும், விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறி, குருநாகல் - பதெனியவில் உள்ள மினுவங்கெட்டே கல்லூரி வளாகத்தில், பாராசூட்களின் உதவியுடன் தரையிறங்கினர்.
இந்த விமானத்தில், தலைமை பயிற்சி பயிற்றுவிப்பாளர் விமானியும் பயிற்சி விமானி அதிகாரியும் இருந்துள்ளனர். மேலும், இந்த அதிகாரிகள் தற்போது குருநாகல் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விமானம் காலை 07.27 மணியளவில் கட்டுநாயக்க விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்டு, காலை 07.55 மணியளவில் விபத்துக்குள்ளானது.