கொத்மலை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகளுக்குரிய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது
தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்தெரிவிக்கiயில்
“கொத்மலை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகளுக்குரிய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதன் பின்னணியில் சூழ்ச்சி ஏதும் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
“எனவே இது சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். நல்ல முடிவு கிட்டும் என நினைக்கின்றோம். நீதிமன்றத்தை நம்புகின்றோம். மற்றத் தொகுதிகளில் எமது நிலவரம் சிறப்பாக உள்ளது. 'காங்கிரஸ் எப்போதும் கொடி கட்டி பறக்கும்” என்றார்.
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்குரிய வேட்பு மனுவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று தாக்கல் செய்தது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானால் வேட்பு மனு கையளிக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்டத்தில், 2025 உள்ளுராட்சி மன்றம் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை சேவல் சின்னத்தில் போட்டியிடுகின்றது. வலப்பனை பிரதேச சபைக்கு மாத்திரம் கதிரை சின்னத்தில் கூட்டணியாக களமிறங்குகின்றது.
நுவரெலியா மாநகரசபை, ஹட்டன்-டிக்கோயா நகரசபை, தலவாக்கலை-லிந்துலை நகரசபை , மஸ்கெலியா, நோர்வூட், கொட்டகலை, அக்கரபத்தனை, அம்பகமுவ, கொத்மலை, ஹங்குராகெத்த ஆகிய பிரதேச சபைகளுக்கு சேவல் சின்னத்தில் காங்கிரஸ் போட்டியிடுகின்றது.