44 தோட்ட வைத்தியசாலைகளை அரசுடைமையாக்குவது தொடர்பான சுற்று நிருபம் எதிர்வரும்

வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பிள்ளைகள், சிறுவர்கள் மத்தியில் மாரடைப்பு சடுதியாக அதிகரித்து வருவதுடன், மக்கள் மத்தியில் புற்றுநோயால் பாதிக்கப்படும் வீதம் உயர்வடைந்துள்ளதாகவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று(06) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் சுகாதாரத்துறை மற்றும் ஊடகத்துறை அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

‘‘முதல்நிலை வைத்திய சேவை, வைத்தியசாலை கட்டமைப்பு அபிவிருத்தி, மருந்து விநியோகம், போசணை மட்டம் மற்றும் உலகளாவிய மட்டத்தில் சுகாதார சேவையை திறம்படுத்தல் ஆகிய ஐந்து துறைகளின் ஊடாக சுகாதார சேவையை அபிவிருத்திசெய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியிலும் இம்முறை அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள தோட்ட வைத்தியசாலைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தோட்ட வைத்தியசாலைகளை அரசுடைமையாக்குவது தொடர்பில் பெருந்தோட்ட அமைச்சு, காணி அமைச்சு மற்றும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு ஆகிய தரப்புகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள 44 தோட்ட வைத்தியசாலைகளை அரசுடைமையாக்குவது தொடர்பான சுற்றுநிருபம் எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படும்.

வைத்தியசாலைகள் அபிவிருத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேசிய வைத்தியசாலை, பொது வைத்தியசாலை, போதனா வைத்தியசாலை, ஆதார மற்றும் மாவட்ட வைத்தியசாலை என்ற அடிப்படையில் பல வைத்தியசாலைகள் காணப்படுகின்றன. இந்த வைத்தியசாலைகளை அபிவிருத்திசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கண்டி, திருகோணமலை, கேகாலை, அம்பாறை மற்றும் சிலாபம் ஆகிய மாவட்டங்களிலுள்ள அரச வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சைப் பிரிவை அபிவிருத்திசெய்வதற்கு 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டுக்குள் இந்தத் திட்டம் நிறைவுபெறும்.

இருதய நோய் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கொழும்பு சீமாட்டி வைத்தியசாலையில் இருதய நோய் சிகிச்சைப் பிரிவை அமைப்பதற்கு ரூபா 1,600 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. பிள்ளைகள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் இருதய நோய் சடுதியாக அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் புற்றுநோயால் பாதிக்கப்படும் விகிதம் உயர்வடைந்துள்ளது.

வருடாந்தம் 36ஆயிரம் பேர் புற்றுநோயாளர்களாக அடையாளம் காணப்படுகின்ற நிலையில், அவர்களில் 24ஆயிரம் பேர் முறையாக சிகிச்சை பெறுகின்றனர். 22 அரச வைத்தியசாலைகளில் புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. அநுராதபுரம், குருநாகல், பதுளை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலுள்ள அரச வைத்தியசாலைகளுக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக லினொக் மருத்துவ சாதனத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆயுர்வேத வைத்திய முறைமையை மேம்படுத்த வரவு செலவுத் திட்டத்தில் 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆங்கில மருத்துவ முறைமைக்கு இணையாக பாரம்பரிய ஆயுர்வேத வைத்திய முறைமையும் அபிவிருத்தி செய்யப்படும். எக்காரணிகளுக்காகவும் நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு ஏற்படாது. தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான மருந்து விநியோகத்துக்கு இம்முறை 183 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே, மருந்து விநியோகம் சீராக முன்னெடுக்கப்படும்.

சுகாதார சேவையில் நிலவும் சம்பள முரண்பாட்டுக்கு இம்முறை தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவையாளர்கள் இன்று (நேற்று) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவிருந்தார்கள். தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தொழிற்சங்கப் போராட்டத்தை தடுத்துள்ளோம். எக்காரணிகளுக்காகவும் சுகாதார சேவை பலவீனமடையாது என்பதை மக்களுக்கு உறுதியளிக்கின்றோம்’’ என்றார்.

இதேவேளை, ‘‘பெருந்தோட்டத்துறைக்கான சுகாதார சேவை செயற்பாடுகளை நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டாமென்பதுடன், பெருந்தோட்ட மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டுமென்றால், அவர்கள் கம்பனிகளின் நிர்வாகத்திலிருந்து முழுமையாக விடுபட வேண்டும்’’ என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

2025ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் அபேசிங்கவால் முன்வைக்கப்பட்ட உரையின் இடைநடுவே எழுந்து கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

‘‘பெருந்தோட்ட தமிழ் மக்கள் பற்றி பேசுவதும் அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். ஆனால், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வரவு செலவுத் திட்டம் மீதான உரையின் இறுதியில் பெருந்தோட்ட நிர்வாகத்தை இணைத்துக்கொண்டு பெருந்தோட்ட வைத்தியசாலைகளுக்கான வசதிகளை மேம்படுத்தப்போவதாகக் கூறியிருந்தார். ஆனால், தயவுசெய்து அதனை மாத்திரம் செய்யவேண்டாமென வேண்டுகோள் விடுக்கிறேன்.

பெருந்தோட்ட மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணையவேண்டுமென்றால் அவர்கள் முழுமையாக அதிலிருந்து விடுபடவேண்டும். பெருந்தோட்ட மக்களின் தொழில்சார் விடயங்களை மாத்திரமே பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு வழங்கவேண்டும். அது தவிர்ந்த ஏனைய சகல விடயங்களையும் தேசிய நிர்வாகத்தின்கீழ் இணைக்க வேண்டும். சுகாதாரம் சார்ந்த விடயங்களை தேசிய சுகாதார வேலைத்திட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும்.

சுகாதாரத் துறைசார்ந்த விடயங்களை பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு வழங்கினால் அந்த சேவை முழு மக்களுக்கும் கிடைக்காது. பெருந்தோட்ட மக்கள் சகலரும் பெருந்தோட்டங்களில் தொழில்புரிவதில்லை. 20 சதவீதமானவர்கள் மாத்திரமே தோட்டங்களில் பணிபுரிகிறார்கள். எனவே, சுகாதாரத் துறைசார் விடயங்களைப் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு வழங்கினால் தோட்டத்தில் தொழில் புரிபவர்களுக்கு மாத்திரமே மருத்துவம் செய்ய முடியும் என்று கூறுவார்கள். எனவே, பெருந்தோட்டங்கள் சார்ந்த சுகாதார விடயங்களை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்க வேண்டும்’’ என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி