நுவரெலியாவில், மரக்கறிகளின் விலைகளைத் தீர்மானிப்பதற்கான குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட விவசாய குழு கூட்டம் மாவட்ட செயலாளர் திருமதி துஷாரி தென்னகோன் தலைமையில் 20.02.2025 அன்று மாவட்ட செயலக மிராக்கிள் மண்டபத்தில் நடைபெற்றது. இக்குழுவில் மாவட்டத்தில் விவசாயம் தொடர்பான பல முடிவுகள் எடுக்கப்பட்டன.
புதிதாக நியமிக்கப்பட்ட நுவரெலியா மாவட்ட செயலாளர் விவசாயக் குழுவில் உரையாற்றியதுடன், மாவட்டத்தில் விவசாயத் துறையின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக கூறினார்.
நுவரெலியா பொருளாதார நிலையத்தில் மரக்கறி விலை நிர்ணயம் தொடர்பில் பொருளாதார நிலைய முகாமையாளர் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்ததுடன், விலை நிர்ணயம் செய்ய குழு ஒன்றின் அவசியத்தை மாவட்ட செயலாளர் சுட்டி காட்டியதுடன், குழு விரைவில் நியமிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மாவட்டத்தில் உள்ள விவசாயம் தொடர்பான நிறுவனங்களின் முன்னேற்ற மீளாய்வு இங்கு மேற்கொள்ளப்பட்டதுடன் விவசாயக் குழுவிற்கு கிடைத்த கடிதங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் நுவரெலியா மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி.தினிகா கவி.சேகர (நிர்வாகம்), மேலதிக மாவட்ட செயலாளர் ஷாலிகா லிடகும்புர (காணி) மாவட்ட விவசாய பணிப்பாளர், மாவட்டத்தில் விவசாயம் தொடர்பான அரச அதிகாரிகள் மற்றும் அனைத்து விவசாய பொதுச்சேவை நிலையங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.