உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து செனல் 4 அலைவரிசைக்கு தகவல்களை வழங்கிய
அசாத் மெளலானா என்றழைக்கப்படும் மொஹமட் மஹிலார் மொஹமட் ஹன்ஸீர் மேலும் தகவல்களை வழங்க தயாராகவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனினும் அசாத் மௌலானா நாடு திரும்புவது தொடர்பில் உறுதியான தீர்மானம் எதனையும் இதுவரை எடுக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அசாத் மௌலானா அரசியல் தஞ்சம் கோரி வெளிநாட்டில் தங்கியுள்ளார். அசாத் மௌலானா, சுயவிருப்பின் பேரில் நாடு திரும்பி தாமாக முன்வந்து உயிர்த்த ஞாயிறு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவிருப்பதாக சட்டவல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களை தேடி வருவதாக அரசாங்கம் கூறும் பொய் தொடர்பில் இன்றையதினம்(03) நாட்டுக்கு அம்பலப்படுத்தப்படவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரை தேடி வருவதாக பொய்யை எழுதி அரசாங்கம் உள்ளாட்சி தேர்தலை குறிவைத்து நாடகம் நடத்த தயாராகி வருகின்றது.
இது தொடர்பில் சகல ஆதாரங்களுடனும் இன்றைய தினம் விசேட அம்பலப்படுத்தப்படவுள்ளது.
அந்தவகையில் இன்றையதினம் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அவர் இதனை வெளிப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.