கிழக்கு மாகாணத்தையே உலுக்கிய படுகொலைகளில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு
- கொக்கட்டிச்சோலை படுகொலையின் 38ஆவது நிறைவு நினைவேந்தல், மட்டக்களப்பில் நேற்று (28) அனுஷ்டிக்கப்பட்டது.
கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் அல்லது இறால் பண்ணைப் படுகொலைகள், 1987ஆம் ஆண்டு ஜனவரி 28, 29, 30 ஆகிய நாட்களில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிச்சோலையில் நடந்தது. இதில் 157 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
நேற்றைய நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு, உயிரிழந்தவர்களின் உறவினர்களுடன் இணைந்து அஞ்சலி செலுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், “இந்த நாட்டில் ஜே.ஆர் ஜனாதிபதியாக இருந்த காலம் தொடக்கம் அநுரகுமார திசாநாயக்க காலம் வரையிலும், இனப்படுகொலைகளுக்கு நீதியைத் தராத நிலையிலேயே நாங்கள் நினைவேந்தல்களை செய்து வருகின்றோம் என்றார்.
“இந்த 37 வருடங்களில் இந்நாடு பல ஜனாதிபதிகளைக் கண்டாலும், தீர்வு எதுவும் இல்லாத நிலையே காணப்படுகிறது. 1987ஆம் ஆண்டு இதே தினத்தில், 33ஆண்டுகளுக்கு முன்பு கொக்கட்டிச்சோலை இறால் வளர்ப்பு என்று கூறுகின்ற மகிழடித்தீவு, முதலைக்குடா இறால் வளர்ப்புப் பண்ணை, படுவான்கரை பெரு நிலத்தில் இராணுவத்தினர் மேற்கொண்ட படுகொலையில் 157க்கும் அதிகமானவர்கள் படுகொலைசெய்யப்பட்டார்கள். அதனைவிட கணக்கெடுக்க முடியாத வகையில் படுகொலைகள் முன்னெடுக்கப்பட்டன.
“பாரிய இனப்படுகொலையொன்று முன்னெடுக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு என்பது, கிழக்கு மாகாணத்தில் இந்த கொக்கட்டிச்சோலை பகுதியில் பெரியளவிலான படுகொலை முன்னெடுக்கப்பட்டது.
“அதன்பின்னர், இந்திய - இலங்கை ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்ட போதிலும், அந்த இனப்படுகொலைகள் முள்ளிவாய்க்கால் வரையில் தொடர்ந்தன. கொக்கட்டிச்சோலை படுகொலையென்பது, அன்றைய காலகட்டத்தில் சர்வதேச ரீதியாக பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது.
“இன்று 38ஆவது ஆண்டினை நினைவுகூரும் போது கூட, படுகொலை செய்தவர்கள் மீதோ அதன் பின்னாளிருந்தவர்கள் மீதோ, எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.