இந்தியா மீனவர்கள் தமது கடற் பரப்பை தாண்டி இலங்கை மீனவர்களின் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவது
அனர்த்தங்களுக்கு வழி வகுப்பதாக, யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்தொழில் நீர்வளத் துறை அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
வடமராட்சிக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில்கருத்துத் தொரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபடாதீர்கள், எமது மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அளிக்காதீர்கள் என, நாங்கள் பலமுறை இந்திய மீனவர்களை தயவாகக் கேட்டுள்ளோம். அண்மையில் கூட, நெடுந்தீவு மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் இந்திய இழுவைப் படகுகள் அத்து மீறி நுழைந்து மீனவர்களின் வலைகளை நாசப்படுத்தியதுடன் அவர்களை பொருளாதார ரீதியாக நலிவுற்றவர்களாக ஆக்கியிருந்தனர்.
“நான் அந்த பகுதிக்கு விஜயம் சென்றபோது, மக்கள் கண்ணீர் மல்க இந்திய இழுவைப் படகுகளை நிறுத்துங்கள் எங்களால் வாழ முடியாதுள்ளது என கூறினார்கள். எமது மீனவ மக்களை இந்திய அத்துமீறிய மீனவர்கள் துன்பப்படுத்தும் செயற்பாடுகளை எக்காரணத்தினாலும் அனுமதிக்க முடியாது.
“எமது இலங்கை கடற்படை, தமது கடல் எல்லையை பாதுகாப்பதற்காக கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அத்துமீறும் இந்திய மீன்பிடிப் படகுகளை கைது செய்வது வளமையான செயற்பாடாகக் கொண்டுள்ளனர்.
“கைது நடவடிக்கைகளில் ஒத்துழைக்காத படகுகளை துரத்தும் போது சில அசம்பாவிதங்கள் கடலில் ஏற்படுகின்றன. இவை கடந்த காலங்களிலும் இடம்பெற்றுள்ளன. ஆகவே, இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை தாண்டாது மீன்பிடியில் ஈடுபடுவது, தேவையற்ற அனர்த்தங்களை தவிர்க்கும்” என, அவர் மேலும் தெரிவித்தார்.