இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து இந்திய இழுவைப் படகுகள் மீன்பிடி
நடவடிக்கையில் ஈடுபட்டதால் நெடுந்தீவு மீனவர்களின் 20 லட்சத்திற்கும் அதிக பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் நேற்றையதினம்(25) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நெடுந்தீவு கடற்பரப்புக்குள் நேற்றையதினம் இரவு இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டது.
இதனை அவதானித்த நெடுந்தீவு மீனவர்கள், இந்திய மீனவர்கள் மீது கல்லை கொண்டு தாக்கிய போதிலும் அவர்கள் திருப்பி தாக்கியதாக கூறப்படுகின்றது.
இவ்வாறானதொரு நிலையில் குறித்த கடற்பகுதியில் காணப்பட்ட நெடுந்தீவு மீனவர்களின் 20 லட்சத்திற்கும் அதிக பெறுமதியான வலைகள் இந்திய இழுவைப் படகுகளால் அறுத்தெறியப்பட்டுள்ளது.
இவ்வாறு தொடர்ச்சியாக அத்துமீறி இந்திய மீனவர்களின் நடவடிக்கையால் தாங்கள் மீன்பிடி தொழிலை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக நெடுந்தீவு மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 33 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில் கடற்படையினர் இன்று (26) காலை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் வந்த மூன்று படகுகளையும் கடற்படை கைப்பற்றியுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் குழுவையும் அவர்களது படகுகளையும் கரைக்கு கொண்டு வந்த பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று கடற்படை தெரிவித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் (03) மற்றும் இந்திய கடற்றொழிலாளர்கள் (33) இரணைதீவுக்கு கொண்டு வரப்பட்டு, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்வள உதவி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.