"அரசியல் கைதிகள் என்று சொல்லப்படுபவர்களை வைத்து அரசியல் நடத்த
இடமளிக்கமாட்டோம். அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்போம்." - என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"அரசியல் கைதிகள் என்று சொல்லப்படுபவர்கள் தொடர்பில் நீதி அமைச்சர் தெரிவித்த கருத்தை சிலர் மீண்டும் அரசியலாக்கியுள்ளனர். உண்மையில் நீதிமன்ற வழக்குகளில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு தமிழர்களைத்தான் அரசியல் கைதிகள் என்று ஒரு தரப்பினரும், புலிகள் அமைப்பின் சந்தேகநபர்கள் என்று இன்னொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
“அப்படியானவர்களில் 10 பேர் வரை தற்போது சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான வழக்குகளை ஆராய்ந்து அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம். எனவே, அரசியல் கைதிகள் என்று சொல்லப்படுபவர்களை வைத்து அரசியல் நடத்த இடமளிக்கமாட்டோம்.
"உயிழந்த தமது உறவுகளை நினைவேந்த எந்த இனத்தவர்களுக்கும் முழு உரிமையுண்டு. அதை எமது அரசு தடுத்து நிறுத்தாது.
“ஆனால், வடக்கு, கிழக்கில் சில நினைவேந்தல் நிகழ்வுகளில் அரசியல் தலையீடு ஆதிக்கம் செலுத்துவதால் அது வெளியில் வேறொரு கோணத்தில் பார்க்கப்படுகின்றது.
“தெற்கில் உள்ள ஒரு தரப்பினர் அதைப் பயங்கரவாதக் கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர். இதனால் வடக்கு - தெற்கு அரசியல்வாதிகளுக்கிடையில் பொது வெளியில் கருத்து மோதல்கள் இடம்பெறுகின்றன.
“எனவே, நினைவேந்தல் என்ற பெயரில் வடக்கு, கிழக்கில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பில் இனிமேல் அதிக கவனம் செலுத்தப்படும். நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்துவது எமது நோக்கம் அல்ல" என்றார்.