இந்திய மத்திய அரசுக்கு, இலங்கைத் தமிழர்கள் தொடர்பான கரிசனை குறைந்துள்ளது.
இலங்கை தமிழர்கள் தீர்வு விடயத்தில், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு மூன்று ஆண்டுகள் தேவை என்று கூறுகிறது. அத்தனைக் காலம் தேவையில்லை. ஏற்கனவே இனங்கிக்கொண்ட விடயத்துக்கு இவ்வளவு காலம் தேவையில்லை. காலத்தை இழுத்தடிப்பது, அதை இல்லாமல் செய்வதற்கான ஒரு திட்டம்” என்று, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (16) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் கூறியதாவது,
“உடுப்பிட்டி மதுபானசாலை ஏன் தொடர்ந்தும் இயங்க வேண்டும் என்பது தொடர்பில் வழக்கு சாட்சியமளிப்பு இடம்பெற்று வருகிறது. நாட்டிலே அதிகரித்த மதுபானசாலைகள் தொடர்பில் பல பிரசினை எழுந்துள்ளது. அதிகரித்த மதுபான பாவனையால் நேற்றும் பருத்தித்துறை வாள்வெட்டு கத்திக் குத்து இடம்பெற்றுள்ளது.
“மன்னாரில் இன்று நீதிமன்றின் முன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறான நிலை நாட்டிற்கு நல்லதல்ல.
“பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக கடந்த காலத்தில் பார் லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. “இலஞ்சத்தை ஒழிப்போம், பார் லைசன்ஸ் விவகாரத்தை வெளிப்படுத்துவோம்” என்று வந்தவர்கள், இன்று வரை அதனை வெளிப்படுத்தவில்லை. இவர்களும் இலஞ்சத்துக்கு துணைபோனவர்களாகத் தான் பார்க்க முடியும். நாம் சவால் விடுகிறோம், முடிந்தால் பார் லைசன்ஸ் விவகாரத்தை உடன் வெளியிடுங்கள். இல்லையேல் தீங்களும் ஊழல்வாதிகள் தான்.
“தமிழரசு தலைமை தொடர்பிலும் புதிய அரசியல் அமைப்புத் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ச.சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பேசி வருகின்ற விடயம் மற்றும் நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் எதிர்வரும் 18ம் திகதி மத்திய குழு கூட்டத்தில் பேசி முடிவெடுப்போம்” என்று, எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.