ஜனாதிபதி அநுர, இன்றைய தினம், சீனாவிற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ

விஜயத்தை தொடங்குவார். அனுரவின் இந்திய விஜயத்தைப் போலவே, பல வெளிநாடுகளும் அனுரவின் சீன விஜயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், இந்த விஜயத்துக்கு சில நாட்களுக்கு முன்பு, சீனாவிலிருந்து ஒரு சிறப்புப் பிரதிநிதி இலங்கைக்கு வந்தார். அவர் லேசுபட்டவர் அல்ல. அவர் ஒரு எளிதான செய்தியுடன் வரவில்லை. அவர், சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கின் சிறப்புச் செய்தியுடன் வந்தார்.

ஜனாதிபதி அநுரவின் சீன விஜயத்தின் போது முன்வைக்கும் எந்தவொரு கோரிக்கையையும் நிறைவேற்றுவதற்கு, சீன ஜனாதிபதி தனது சம்மதத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது நிறுத்தப்பட்டுள்ள சீன நெடுஞ்சாலை கட்டுமானத் திட்டங்களை மீண்டும் தொடங்குவதாகவும் சீனா அறிவித்துள்ளது.

இருப்பினும், கொடுக்கப்படும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளவோ அல்லது எல்லாவற்றையும் கோரவோ ஜனாதிபதி அனுர தயாராக இல்லை என்று உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவையானதை, விரும்பிய முறையில் கோருவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், சீனாவில் மிக முக்கியமான ஏழு ஒப்பந்தங்களில் ஜனாதிபதி கையெழுத்திட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், சண்டே டைம்ஸ் செய்தித்தாளுக்கு சில குறிப்புகளைத் தெரிவித்துள்ளார்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு மேலதிகமாக, பொருளாதார மீட்சிக்கு சீனாவின் ஆதரவைத் தேடுவது தொடர்பில் விவாதிக்கப்படும் முக்கிய தலைப்புகளில் அடங்கும். இது, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு சீனாவின் ஆதரவோடு ஒத்துப்போகிறது.

இந்தப் பயணத்தின் போது, ஜனாதிபதி திசாநாயக்க, பரஸ்பர ஆர்வமுள்ள பல துறைகள் குறித்து ஜனாதிபதி ஸீ ஜின்பிங்குடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார். முன்மொழியப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், விவசாயம், சுற்றுலா, கல்வி மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளும் அடங்கும்.

இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு சீன உதவியைப் பெறுவது குறித்தும், சீன நிதியுதவியுடன் கூடிய சாலை மேம்பாட்டுத் திட்டங்களை மீண்டும் தொடங்குவது குறித்தும் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மீன்வளத்துறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், மீனவர்களுக்கான வீட்டுவசதித் திட்டத்தை வழங்குதல், விவசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் சீன உதவியுடன் சூரிய ஆற்றல் திட்டங்களை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட சமூகநல அம்சங்களை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வித்துறை குறித்த கலந்துரையாடல்கள், இலவசப் பாடசாலைச் சீருடைகளைப் பெறுவது மற்றும் பாடசாலைகளுக்கான ஸ்மார்ட் போர்ட் திட்டம் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளன. மேலும், அனுரா இரண்டு முக்கிய வணிக மன்றங்களிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

இதற்கிடையில், ஜனாதிபதி அனுரவின் சீன விஜயத்திற்கு முன்னதாக, கடந்த சில நாட்களாக பெலவத்தையில் உள்ள ஜேவிபி தலைமையகத்தில், விரிவான அரசியல் கலந்துரையாடல்கள் நடைபெற்றதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

அரசாங்கத்திற்குள் எழுந்துள்ள அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக நடத்தப்பட்ட இந்தக் கூட்டங்கள், சில நேரங்களில் நள்ளிரவு வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளன.

ஜனாதிபதி, சீனாவுக்கான தனது பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென நாட்டில் உள்ள அனைத்துப் பத்திரிகைகளின் ஆசிரியர்களையும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு வரவழைத்தார். எல்லோரும் இதை உன்னிப்பாகக் கவனித்து வந்தனர்.

இந்திய உயர்ஸ்தானிகரின் முழு கருத்துக்களும், ஜனாதிபதியின் சமீபத்திய இந்திய விஜயத்தின்போது எட்டப்பட்ட ஒப்பந்தங்களை தெளிவுபடுத்துவதில் கவனம் செலுத்தின.

அங்கு, இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்படவுள்ள எக்டா ஒப்பந்தம், சம்பூர் மின் உற்பத்தி நிலையம், மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிலையம், நிர்மாணிக்கப்படவுள்ள உத்தேச மின்சார துணை மின் நிலையம் மற்றும் உதவி மற்றும் மானியங்கள் குறித்து இந்திய உயர்ஸ்தானிகர், பத்திரிகை ஆசிரியர்களுக்கு நீண்ட விளக்கத்தை அளித்தார்.

இந்தக் கலந்துரையாடலின் போது,  இந்தக் கடல்சார் பிராந்தியத்தின் பாதுகாப்பு குறித்து இந்தியப் பிரதமர் மோடி மிகுந்த கவனம் செலுத்தியதாகவும், இந்தியாவின் பாதுகாப்பிற்கும் இலங்கையின் கடல்சார் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு முடிவையும் தான் எடுக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியதாகவும், இந்திய உயர்ஸ்தானிகர் கூறினார்.

இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நில எல்லைகள் பயன்படுத்தப்படாது என்றும் கூறினார். அந்த சந்திப்பிலிருந்து, சீன ஆராய்ச்சி கப்பல்கள் குறித்து இந்தியா மிகுந்த கவலை கொண்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிந்தது.

அத்தகைய கப்பல்களுக்கு அனுமதி வழங்குவதால் ஏற்படும் அபாயங்களை இந்தியா கண்காணித்து வருவதாக, உயர்ஸ்தானிகரின் கருத்துக்கள் வெளிப்படுத்தின.

சீனா, ஜனாதிபதியின் இந்திய வருகையை எவ்வளவு கவனமாகக் கவனித்துக் கொண்டிருந்ததோ, அதே அளவுக்கு, ஜனாதிபதியின் சீன விஜயத்தை இந்தியாவும் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி