முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ,
தன்னை அரசியல் சூனிய வேட்டையில் சிக்க வைத்து, பொய்யான வழக்கில் சிக்க வைக்கும் முயற்சியில் இருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பான வழக்கு, அவர் பாடசாலையில் மாணவனாக இருந்தபோது 2006 மற்றும் 2007களில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
கதிர்காமத்தில் உள்ள காணி ஒன்றின் உரிமை தொடர்பாக, நேற்று காலை சிஐடியினரால் யோஷித ராஜபக்ச விசாரணைக்கு உட்பட்டார். அந்த நிலம் அரசுக்கு சொந்தமானதாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
யோஷித அளித்த வாக்குமூலத்தின் பிறகு, அவர் டெய்லி மிரருக்கு தெரிவித்திருப்பதாவது, “இந்த விவகாரம் 2006 மற்றும் 2007களுக்குள் நடந்தது. 2023ஆம் ஆண்டு, அந்த காணிக்கு அருகிலுள்ள கோவிலுக்கு சில உதவிகள் வழங்கியதாக நான் கூறினேன். எனக்கு அந்த காணி பற்றி தெரியவில்லை” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது, “2017ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் இந்த வழக்கு குறித்து விசாரணையை நடத்தியபோது, எனது பெயர் இதில் தொடர்புடையதாக இல்லை. தற்போது இந்த புதிய அரசாங்கம் என்னை அரசியல் இலாபங்களுக்காக பொய்யான வழக்கில் சிக்க வைக்க முயற்சிப்பதாக நான் உணருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
யோஷித ராஜபக்ஷ, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தன்னை வேறு பொய் வழக்குகளில் சிக்க வைக்க முயற்சித்ததாகவும், அந்த வழக்குகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.