புத்தாண்டுக்கு புதிய வியாக்கியானத்தை இணைக்கும் சவால் அரசாங்கத்திற்கு
இருப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன், அந்தச் சவாலை நிறைவேற்றுவதற்கு முழு அரசியல் அதிகாரமும் துணை நிற்கும் என்று கூறிய ஜனாதிபதி, புதிய அரசியல் கலாசாரத்துடன் புதிய வருடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தூய்மையான இலங்கை தேசிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட, அரசாங்கம் கடுமையாக உழைத்து வருவதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, இலஞ்சமும் ஊழலும் புற்று நோயாக நாடு முழுவதும் பரவியுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஊழல் மோசடிகளை நிறுத்துவதற்கு அரசியல் அதிகாரத்தின் தலையீடும் முன்னுதாரணமும் போதாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, அரச நிறுவனங்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை சரியாகப் புரிந்துகொண்டு, அதற்கான ஆதரவை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
"எந்தவொரு வலுவான இயக்கத்தையும் தொடங்க, மிகவும் வலுவான அடித்தளம் தேவை. நமது நாடு, நம் தேசம் அதன் அடித்தளத்தை இழந்த நாடு. எனவே, ஆரம்ப அணுகுமுறையை நாங்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கு முடித்துள்ளோம். இந்த நாட்டை மீட்டெடுப்பதற்கு தேவையான அடித்தளத்தை நாங்கள் தயார் செய்துள்ளோம். அரசியல் அதிகாரம், அரசு இயந்திரம், சட்டத்தின் ஆட்சி, அரசியலமைப்பின் மீதான மரியாதை மற்றும் பாதுகாப்பு இந்த அடித்தளத்தை மிக வேகமாக உருவாக்கி வருகிறோம். எனவே, அரசின் மூன்று முக்கிய நோக்கங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.
இதேவேளை, எதிர்வரும் வரவு செலவுத் திட்டம் வறுமையை ஒழிக்கும் புதிய பொருளாதார வேலைத்திட்டத்தின் ஆரம்பத்தை குறிப்பதாகவும், இரண்டாவதாக நாட்டை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மூன்றாவது வேலைத்திட்டம், “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம் எனவும், சிதைந்து கிடக்கும் முழு தாய்நாட்டையும் மீட்டெடுப்பதற்காக, அனைத்துத் துறைகளையும் தூய்மைப்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.