அண்மையில் முடிவடைந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளில் மூன்று
வினாக்களுக்கு இலவச புள்ளிகள் வழங்குவதற்கான தீர்மானம் அடிப்படை மனித உரிமை மீறல் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், நிபுணர்கள் முன்வைத்த மூன்று பரிந்துரைகளில் பொருத்தமான பரிந்துரையை தேர்வு செய்து, உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்துக்கு, நீதியரசர்கள் குழு உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த வினாத்தாள்கள் வெளியானதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஐ.ஜி.எஸ்.பிரேமதிலக்க - மூன்று மில்லியன் ரூபாவும் சமிந்த குமார இளங்கசிங்க - இரண்டு மில்லியன் ரூபாவும், அரசாங்கத்திற்கு நட்டஈடு செலுத்த வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பரீட்சையில் பங்குபற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தாக்கல் செய்த நான்கு அடிப்படை உரிமை மனுக்களை ஆராய்ந்த நீதியரசர்களான யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த முடிவை அறிவித்துள்ளது.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் மூன்று கேள்விகள் முன்கூட்டியே வெளியிடப்பட்டதன் காரணமாக, அந்த பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் அந்த மூன்று கேள்விகளுக்கும் இலவச மதிப்பெண்கள் வழங்குவதற்கான அரசாங்கத்தின் முடிவால் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக, மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் மூலம் தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்குமாறு கோரி, இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.