தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கத்தின் போது
விமானம் விபத்துக்குள்ளானதில் 181 பேரில், இருவரைத் தவிர அனைவரும் இறந்து விட்டதாக அந்நாட்டின் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் எஞ்சியுள்ள சடலங்களை மீட்க மீட்பு குழுக்கள் தொடர்ந்து தேடி வருகின்றன.
இந்நிலையில் மீட்கப்பட்ட இருவரில் ஒரு பயணி மற்றும் ஒரு விமான ஊழியர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரிய விமான விபத்து ஏற்பட்டு சில மணிநேரங்களில் கனடாவில் ஹாலிஃபாக்ஸில் தரையிறங்கிய ஏர் கனடா விமானத்தில் தீப்பிடித்துள்ளது.
இதன்போது, பயணிகள் அதிகளவு பதற்றமடைந்துள்ள நிலையில் விமானத்திற்குள் இருந்து ஒருவர் பதிவு செய்த காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
சம்பவத்தை தொடர்ந்து ஹாலிஃபாக்ஸ் ஸ்டான்ஃபீல்ட் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பிஏஎல் ஏர்லைன்ஸால் இயக்கப்படும் ஏர் கனடா விமானம் 2259, நியூஃபவுண்ட்லேண்டின் செயிண்ட் ஜோன்ஸிலிருந்து வந்துள்ளது.
இதன்போது, தரையிறங்கும் கியரில் ஏற்பட்ட ஒரு கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் அது விமானத்தின் ஒரு பகுதி முழுவதற்கும் பரவியது.
ஆரம்ப அறிக்கைகளின்படி, விமானத்தின் டயர்களில் ஒன்று சரியாக இயங்கத் தவறியதால் ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக விமானத்தின் இறக்கை ஓடுபாதையில் உரசி தீப்பிடித்துள்ளது.
எனினும் அவசரகால மீட்புக் குழுக்களால்,அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.