தேசிய புலனாய்வு பிரிவிற்கு அலுவலகம் அமைப்பதற்காக வவுனியா நகரப்பகுதியில் காணி
கோரப்பட்ட நிலையில், அது நிராகரிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பிரதேச ஒருங்கினைப்பு குழுக் கூட்டம், ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் உபாலி சமரசிங்க தலைமையில் நேற்றையதினம் (27) இடம்பெற்றது.
காணியற்ற அரச திணைக்களங்கள், தேசிய புலனாய்வு அலுவலகம் மற்றும் பொது அமைப்புக்கள் ஆகியன, தமக்கு நகரப்பகுதியில் காணி ஒதுக்கித்தருமாறு வவுனியா பிரதேச செயலகத்திடம் கடந்த காலங்களில் கோரிக்கை விடுத்திருந்தது.
அதற்கமைய, குறித்த அமைப்புக்களுக்கு வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள பகுதி மற்றும் திருநாவற்குளம் பாரவூர்தி தரிப்பிடம் ஆகியவற்றை பிரித்து வழங்குவது தொடர்பாக கடந்த காலங்களில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களின் போது அனுமதி கோரப்பட்டிருந்தது.
எனினும், குறித்த காணி விடயத்தில் தேசிய புலனாய்வு அலுவலகத்தின் காணிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக, நேற்றையதினம் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, வவுனியாவில் பெரும் காடுகளில் ஏக்கர் கணக்கான காணிகளில் இராணுவம் முகாம் அமைத்துள்ள நிலையில், கால்நடைகளுக்கான மேச்சல் தரை அமைப்பதில் மாத்திரம் திணைக்களங்கள் அக்கறையில்லாமல் செயற்படுவதாக வவுனியா ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின்போது சுட்டிக்காட்டப்பட்டது.
வவுனியாவில் மேச்சல் தரை இல்லாமல் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோர் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்வதாகவும் இதன்போது கவலை தெரிவிக்கப்பட்டது.
மழைக் காலங்களில் அதன் நிலமை மேலும் மோசமடைவதுடன், பால் உற்பத்தியும் வீழ்ச்சியடையும் நிலை காணப்படுகின்றது. இராணுவம் பெரும் காடுகளில் பல ஏக்கர்கணக்கான காணிகளை பிடித்து முகாம் அமைத்துள்ளது.
ஆனால், நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்களிக்கும் கால்நடைகளுக்கு, மேச்சல் தரை வழங்குவதில் அதிகாரிகள் பின்னடிப்பதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தினர்.
குளத்தின் அலைகரைப்பகுதிகளில் மேச்சல் தரை அமைப்பது தொடர்பாக ஆராயுமாறும் அரச காணிகளை அடாத்தாக பிடித்து வைத்திருக்கும் நபர்களிடம் இருந்து அந்த காணிகளை பறித்து மேச்சல் தரை அமைப்பது தொடர்பாக பரிசீலிக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் இதன்போது தெரிவித்திருந்தார்.