உப்பு இறக்குமதி தொடர்பாக சர்வதேச டெண்டர் கோரப்பட்டுள்ளது. நாட்டில் நிலவிய சீரற்ற
வானிலை காரணமாக, 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அவதானம் காரணமாக, 30,000 மெற்றிக் தொன் அயடின் கலந்த உப்பை இறக்குமதி செய்வதற்கு கடந்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
2025ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர், இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம், உப்பை இறக்குமதி செய்து உள்ளூர் உப்பு உற்பத்தியாளர்களால் சந்தைக்கு வழங்குவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
அதன்படி, அக்கூட்டுத்தாபனம் உப்பு இறக்குமதிக்கு தகுதியான சர்வதேச விநியோகஸ்தர்களிடம் இருந்து டெண்டர் கோர நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கான டெண்டர் கோரும் பணி, கடந்த 21ஆம் திகதி தொடங்கி, ஜனவரி 2ஆம் திகதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக, கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
உப்பை நேரடியாக இறக்குமதி செய்ய உள்ளூர் உற்பத்தியாளர்கள் அனுமதி கோரிய போதும், அரசு தரப்பில் இருந்து பணிகளை மேற்கொள்ள வர்த்தக அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
ஜனவரி 31ஆம் திகதி வரை மட்டுமே உப்பு இறக்குமதி செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், டெண்டர் நடைமுறைக்கு பின்னர், அந்த நடவடிக்கைகளுக்கு மிகக் குறுகிய காலமே எஞ்சியுள்ளதால், அந்த காலகட்டத்தில் 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்வது நடைமுறையில் கடினமான செயல் என தொழில்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக உப்பை இறக்குமதி செய்ய முடியாத பட்சத்தில், உப்பு தொடர்பான சில பொருட்களுக்கு இடையூறு ஏற்படும் நிலை ஏற்படக்கூடும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏற்படக்கூடிய நிலைமையை கட்டுப்படுத்த, உப்பு இறக்குமதி நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என, இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்துள்ளார்.